செய்திகள்
குளித்தலையில் கவரிங் நகைக்கடையில் ரூ.30 ஆயிரம் திருட்டு
குளித்தலையில் கவரிங் நகைக்கடையில் ரூ.30 ஆயிரத்தை திருடி சென்ற மர்மநபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
குளித்தலை:
கரூர் மாவட்டம், குளித்தலை பேராளம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் தர்மசீலன் (வயது 23). இவர் அதே பகுதியில் கவரிங் நகைக்கடை நடத்தி வருகிறார். இவர் தினந்தோறும் கடையில் விற்பனையாகும் பணத்தை கடையின் கல்லாவில் வைத்து விட்டு மறுநாள் வந்து எடுப்பது வழக்கம். அதேபோல நேற்று முன்தினமும் அன்று விற்பனையாக பணத்தை கல்லாவில் வைத்து பூட்டு விட்டு வீட்டிற்கு சென்று விட்டார். இந்தநிலையில் நேற்று காலை வழக்கம்போல் தர்மசீலன் கடைக்கு வந்து பூட்டை திறந்து உள்ளே சென்றார்.
இக்கடையின் மேல் அமைக்கப்பட்டிருந்த ‘பால்சீலிங்கை’ உடைத்து உள்ளே இறங்கி கல்லாவில் இருந்த ரூ.30 ஆயிரத்தை மர்மநபர் ஒருவர் திருடி சென்றது தெரியவந்தது. பின்னர் உடனடியாக குளித்தலை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவலின்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தடயங்களை சேகரித்தனர். இந்த திருட்டு சம்பவம் குறித்து குளித்தலை போலீஸ் நிலையத்தில் தர்மசீலன் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் மர்மநபரை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் குளித்தலை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.