அசோக் நகர்-எம்.ஜி.ஆர்.நகர் பகுதியில் கஞ்சா விற்ற பெண்கள் உள்பட 7 பேர் கைது
போரூர்:
சென்னை எம்.ஜி.ஆர். நகர் அசோக்நகர் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெற்று வருவதாக தொடர்ந்து புகார்கள் வந்தன.
இதையடுத்து போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் எம்.ஜி.ஆர். நகர் அடுத்த நெசப்பாக்கம் மதுபான பார் அருகே நேற்று இரவு 2 வாலிபர்கள் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதாக எம்.ஜி.ஆர். நகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து அங்கு சென்ற போலீசார் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கே.கே.நகர் வன்னியர் தெருவைச்சேர்ந்த கவுதமன், தர்ஷன் ஆகிய இருவரையும் பிடித்து விசாரித்தனர்.
அப்போது வடபழனி காவாங்கரை பகுதியைச் சேர்ந்த கஞ்சா வியாபாரி ராஜேஸ்வரி என்பவரிடம் இருந்து கஞ்சா வாங்கி வந்ததாக தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து ராஜேஸ்வரி வீட்டிற்கு சென்று போலீசார் சோதனை நடத்தினர் அங்கு ஒரு கிலோ கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
ராஜேஸ்வரியுடன் சேர்ந்து கஞ்சா விற்பனை செய்து வந்த நாகம்மாள், லட்சுமிகுமார் உள்ளிட்ட 4 பேரையும் போலீசார் கைது செய்தனர் ராஜேஸ்வரி அளித்த தகவலின்படி திருவொற்றியூர் கோதண்டம் என்பவரை கைது செய்தனர். அவரது வீட்டில் 10 கிலோ கஞ்சா மற்றும் ரூ.65 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
கைதான கோதண்டம் ஆந்திராவில் இருந்து மொத்தமாக கஞ்சா வாங்கி வந்து சென்னை நகர் முழுவதும் சில்லரை வியாபாரிகளுக்கு கஞ்சாவை சப்ளை செய்து வந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.