செய்திகள்
கிராம மக்கள் மறியல் செய்த காட்சி.

ஆரணி அருகே சாலையை சீரமைக்க கோரி கிராம மக்கள் மறியல்

Published On 2019-11-04 17:01 GMT   |   Update On 2019-11-04 17:01 GMT
ஆரணி அருகே சாலையை சீரமைக்க கோரி கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டனர். அதில் ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆரணி:

ஆரணி அருகே அறியாத்தூர், வம்பலூர், கரிகாத்தூர், ஓங்கூர் என 4 கிராமங்கள் உள்ளன. இங்கு 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த ஊர்களில் இருந்து போளூர் செல்லும் 10 கிலோ மீட்டர் சாலை கடந்த 25 ஆண்டுகளாக குண்டும் குழியுமாக இருந்தது. கடந்த 6 மாதத்திற்கு முன்பு சாலையை சீரமைப்பதாக கூறி பொக்லைன் எந்திரம் மூலம் சாலையைத் தோண்டி போட்டு விட்டு சென்றனர். இதனால் சாலை மேலும் குண்டும் குழியுமாக மாறியது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், வேலைக்கு செல்வோர் என பலரும் பாதிக்கப்பட்டனர்.

இந்த சாலையை சீரமைக்கக் கோரி எம்.எல்.ஏ. மற்றும் கலெக்டர் அலுவலகத்தில் பலமுறை மனு அளித்தனர். ஆனால் சாலையை சீரமைக்க இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஆரணி, போளூர் சாலையில் வடமாதிமங்கலம் கூட்டு ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர் இதுகுறித்து தகவல் அறிந்த ஆரணி டி.எஸ்.பி. செந்தில், இன்ஸ்பெக்டர் விநாயகமூர்த்தி மற்றும் களம்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது மறியலில் ஈடுபட்டிருந்த வாலிபர் ஒருவர் பெட்ரோலை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அங்கிருந்த போலீசார் வாலிபரிடம் இருந்த பெட்ரோல்கேனை பறித்து சென்றனர். 

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில்:-

சாலையை சீரமைக்க விட்டால் நான்கு கிராம மக்களும் வரும் உள்ளாட்சித் தேர்தலை புறக்கணிக்க உள்ளதாக தெரிவித்தனர். சுமார் அரை மணி நேரமாக நடந்த மறியலால் ஆரணி போளூர் சாலையில் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றது. இதனால் வெளியூர் செல்லும் பயணிகள் பெரும் அவதி அடைந்தனர்.
Tags:    

Similar News