கண்ணமங்கலம் அருகே பள்ளி பஸ் மோதிய விபத்தில் 9-ம் வகுப்பு மாணவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
கண்ணமங்கலம் அருகே உள்ள துருகம் கிராமத்தை சேர்ந்த நெசவுத்தொழிலாளி சரவணன் மகன் சோபன்பாபு (வயது 14) என்பவர், கண்ணமங்கலத்தில் உள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.
நேற்று மாலை சுமார் 4.50 மணியளவில் சோபன்பாபு, தனது வீட்டிலிருந்து சைக்கிளில் ஒண்ணுபுரம் கிராமத்தில் டியூஷன் வகுப்புக்கு சென்றான்.
அப்போது வழியில் ஒண்ணுபுரம் ரெயில்வே கேட் பகுதியில் சைக்கிளில் சாலையோரம் சென்ற சோபன்பாபு மீது, அவ்வழியே வந்த தனியார் பள்ளி பஸ் மோதியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இச்சம்பவம் தொடர்பாக தகவலறிந்த கண்ணமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ரேகாமதி, சப்-இன்ஸ்பெக்டர் விநாயகமூர்த்தி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, பிணத்தை பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் சோபன்பாபுவின் தந்தை சரவணன் புகாரின் மீது, தனியார் பள்ளி பஸ் டிரைவர் சிதம்பரம் (40) என்பவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.