செய்திகள்
கிருஷ்ணகிரியில் பசு மாடுகளை திருடிய 2 பேர் கைது
கிருஷ்ணகிரியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பசு மாடுகளை திருடி வந்த 2 பேரை கைது செய்தனர்.
தேன்கனிக்கோட்டை:
கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகே பசுமாடுகள் திருடப்படுவதாக அஞ்செட்டி போலீஸ் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அஞ்செட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாண்டுரங்கன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தக்கட்டி அருகே இரண்டு பசுமாடுகளை பிடித்துக்கொண்டு இருவர் வந்து கொண்டிருந்தனர்.
இவர்களை பிடித்து போலீசார் விசாரணை செய்ததில் முன்னுக்குப்பின் முரணாக பேசியதை அடுத்து, சந்தேகம் அடைந்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் கோட்டையூர் அடுத்துள்ள மல்லஅள்ளி கிராமத்தை சேர்ந்த படையப்பா (வயது 23) மற்றும் தக்கட்டி அருகே உள்ள ஆலம்பாடி கிராமத்தை சேர்ந்த மகேந்திரன் (வயது 27) என்பதும், இவர்கள் மாடுகளை திருடி அழைத்துச்சென்றது தெரியவந்தது. போலீசார் இவர்களை கைது செய்தனர்.
இவர்கள் திருடி வந்த இரண்டு பசுமாடுகளும் கோட்டையூர் கிராமத்தை சேர்ந்த ராஜப்பா என்பவருக்கு சொந்தமானது என தெரியவந்தது. கைது செய்யப்பட்ட இவர்களை போலீசார் சிறையில் அடைத்தனர்.