கோவையில் காட்டு யானை தாக்கி விவசாயி பலி
கோவை:
கோவை மேற்கு தொடர்ச்சி மலையடிவாரப்பகுதியான பொன்னூத்து மலையில் 50-க்கும் மேற்பட்ட காட்டுயானைகள் வசித்து வருகின்றன. யானைகள் அவ்வப்போது விளை நிலங்களுக்குள் நுழைந்து தென்னை, வாழை மற்றும் விவசாய பயிர்களை தின்றும், மிதித்தும் நாசம் செய்கின்றன. சில நேரங்களில் மனித- விலங்கு மோதல் நடைபெற்று உயிழப்பு ஏற்படுகிறது.
இந்நிலையில் காரமடை அடுத்துள்ள சீளியூரை சேர்ந்தவர் சுந்தரம் (வயது 55). விவசாயி. இவர் சம்பவத்தன்று தேக்கம்பட்டியில் ஆடு மேய்த்தார். அப்போது அங்கு மறைந்திருந்த காட்டுயானை சுந்தரத்தை தாக்கியது. இதில் அவர் படுகாயம் அடைந்தார். சுந்தரத்தின் அலறல் சத்தம்கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தபோது சுந்தரம் உயிருக்கு போராடினார். யானையை பொதுமக்கள் விரட்டி விட்டு சுந்தரத்தை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு தீவிர சிகிச்சை பெற்ற சுந்தரம் சிகிச்சை பலனின்றி இன்று காலை பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து காரமடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.