ஒரத்தநாடு அருகே 5-ம் வகுப்பு மாணவர் கடத்தல்- மனைவி கடத்தியதாக கணவர் புகார்
ஒரத்தநாடு:
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே பின்னையூர் மேலத் தெருவைச் சேர்ந்தவர் சின்னையன் (வயது45) விவசாயி இவரது மனைவி மாசிலாமணி (35) இவர்களுக்கு முகேஷ்குமார் (10) என்ற மகன் உள்ளான்.
இந்த நிலையில் கணவன் -மனைவிக்கு இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டு பிரிந்துவிட்டனர். இதைத் தொடர்ந்து மாசிலாமணி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சிங்கப்பூர் சென்று அங்கு வேலை பார்த்து வருகிறார். தந்தையுடன் வசிக்கும் முகேஸ்குமார் ஒரத்தநாடு பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தான்.
இந்த நிலையில் கடந்த 19-ந் தேதி பள்ளிக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்த முகேஷ்குமாரை காரில் வந்த மர்ம நபர்கள் கடத்தி சென்றுவிட்டனர். அவனை பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் இதுபற்றி சின்னையன் ஒரத்தநாடு போலீசில் புகார் செய்துள்ளார். அதில் தனது மனைவி கூலிப்படையை வைத்து மகனை கடத்தி சென்றுவிட்டார் என்று கூறி உள்ளார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கடத்தப்பட்ட முகேஷ்குமாரையும், அவரை காரில் கடத்தி சென்றவர்களையும் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் ஒரத்தநாடு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.