செய்திகள்
கோவையில் 5-வது மாடியில் இருந்து தவறி விழுந்த துப்புரவு தொழிலாளி பலி
கோவையில் நேற்று இரவு தனது வீட்டு 5-வது மாடியில் இருந்து தவறி விழுந்த துப்புரவு தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
கோவை:
கோவை வெரைட்டி ஹால் ரோடு அருகே உள்ள சி.எம்.சி. காலனியை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 39). துப்புரவு தொழிலாளி. நேற்று இரவு இவர் தனது வீடு அமைந்துள்ள 5-வது மாடியில் நின்று கொண்டு இருந்தார். அப்போது திடீரென நிலைதடுமாறி கீழே விழுந்தார்.
இதில் தலை மற்றும் உடலில் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடிய அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே கார்த்திகேயன் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து வெரைட்டிஹால் ரோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.