செய்திகள்
பெரியமேடு-புழலில் டெங்கு காய்ச்சலுக்கு சிறுவன்-சிறுமி பலி
பெரியமேடு மற்றும் புழலில் டெங்கு காய்ச்சலுக்கு சிறுவன்-சிறுமி பலியாகி இருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை:
சென்னை மற்றும் காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிக அளவில் உள்ளது. கடந்த வாரத்தில் திருவள்ளூர் மாவட்டத்தில் மட்டும் டெங்கு காய்ச்சலுக்கு பள்ளி மாணவி உள்பட 5 பேர் பலியானார்கள். டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த சுகாதாரத்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் சென்னை பெரியமேடு, புழலில் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் சிறுவனும், சிறுமியும் பலியாகி இருப்பது மேலும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை, பெரியமேடு ஸ்டிங்கர்ஸ் சாலையில் வசித்து வருபவர் ஆனந்தன். இவரது மகள் அக்சிரா (வயது7). அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தாள். காய்ச்சலால் உடல் நிலை பாதிக்கப்பட்ட அக்சிராவை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிறுமி அக்சிரா பரிதாபமாக இறந்தாள். அவளுக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறி இருந்ததாக உறவினர்கள் தெரிவித்தனர்.
புழல் அடுத்த புத்தகரம், புருஷோத்தமன் நகர் 2-வது தெருவை சேர்ந்தவர் குணசேகரன். இவரது மகன் அரவிந்தன் (வயது10). தனியார் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தான். கடந்த சில நாட்களாக அரவிந்தனுக்கு காய்ச்சலால் உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்தது. அவனை சிகிச்சைக்காக எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் நேற்று மாலை சிகிச்சை பலனின்றி அரவிந்தன் பரிதாபமாக இறந்தான். அவனுக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறி இருப்பது உறுதி செய்ததாக தெரிகிறது. இதேபோல் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குணசேகரனின் 2-வது மகன் அருணாசலமும் எழும்பூர் குழந்தைகள் நல ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவனது உடல் நிலையை டாக்டர்கள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.