செய்திகள்
வில்லியனூரில் ஓய்வு பெற்ற ஆசிரியர் மனைவியிடம் நகை-பணம் பறிப்பு
வில்லியனூரில் பட்டப்பகலில் ஓய்வு பெற்ற ஆசிரியர் மனைவியிடம் ரூ.1 1/2 லட்சம் மதிப்புள்ள நகை- பணத்தை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
வில்லியனூர்:
ஏம்பலம் டி.வி. நகர் அரசு மேல்நிலைப்பள்ளி எதிரே வசித்து வருபவர் ஜெயபாலன் (வயது 62). ஓய்வு பெற்ற ஆசிரியர். இவரது மனைவி பத்மாசினி. இவர் புதிய நகை வாங்க விரும்பினார். இதற்காக ஜெயபாலனும், அவரது மனைவி பத்மாசினியும் அங்குள்ள பாரதியார் கூட்டுறவு வங்கியில் இருந்து ரூ.90 ஆயிரத்தையும், வீட்டில் இருந்த பழைய நகை 1 1/2 பவுன் வளையல் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு நேற்று மதியம் புதுவைக்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு வந்தனர்.
நகை - பணத்தை பத்மாசினி ஒரு கை பையில் வைத்து எடுத்து வந்தார். வில்லியனூர் பைபாஸ் சாலையில் வந்தபோது மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்த 2 மர்ம நபர்கள் திடீரென பத்மாசினியிடம் இருந்த நகை - பணம் வைத்திருந்த கைப்பையை பறித்தனர். பத்மாசினியும், ஜெயபாலனும் திருடன்... திருடன் என அலறுவதற்குள் அவர்கள் மின்னல் வேகத்தில் மோட்டார் சைக்கிளில் பறந்து சென்று விட்டனர்.
பறிபோன நகை- பணத்தின் மொத்த மதிப்பு ரூ. 1 1/2 லட்சமாகும். இது குறித்து ஜெயபாலன் வில்லியனூர் போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நந்தகுமார் வழக்குபதிவு செய்து மரம நபர்களை தேடி வருகிறார். பட்டப்பகலில் நடந்த இந்த துணிகர சம்பவம் வில்லியனூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.