செய்திகள்
விபத்து

தோவாளை ஆற்று பாலம் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் 2 வாலிபர்கள் பலி

Published On 2019-10-13 10:30 GMT   |   Update On 2019-10-13 10:30 GMT
தோவாளை ஆற்று பாலம் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் 2 வாலிபர்கள் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆரல்வாய்மொழி:

நாகர்கோவில் பார்வதிபுரம் ராஜீவ்காந்தி நகரைச் சேர்ந்தவர் நடராஜன். இவரது மகன் லெட்சுமணன், (வயது 23).

இவர், வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்வதற்கு முயற்சிகள் செய்து வந்தார். நேற்றிரவு லெட்சுமணன், நாகர்கோவில் கட்டையன் விளையைச் சேர்ந்த தனது நண்பர் விஜய் (17) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் நாகர்கோவிலில் இருந்து ஆரல்வாய்மொழிக்கு சென்றனர்.

தோவாளை ஆற்றுப் பாலம் அருகே உள்ள வழிச்சேரி இசக்கியம்மன் கோவில் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி கீழே சரிந்தது. இதில் லெட்சுமணனும், விஜய் ஆகிய இருவரும் தூக்கி வீசப்பட்டனர்.

அவர்களுக்கு தலை மற்றும் உடல் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. சிறிது நேரத்தில் லெட்சுமணனும், விஜய் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

விபத்து பற்றி தகவல் அறிந்ததும், ஆரல்வாய் மொழி சப்-இன்ஸ்பெக்டர்கள் சங்கரகுமார், அஜித்குமார் மற்றும் நெடுஞ்சாலை ரோந்து போலீசாரும் அங்கு விரைந்து வந்தனர். பிணமாக கிடந்த இருவரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

லெட்சுமணன், விஜய் பலியான தகவல் அவரது குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டது. இதைக்கேட்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

விபத்து நடந்த பகுதி ஆபத்தான வளைவு பகுதியாகும். இந்த பகுதியில் மெதுவாக செல்ல வேண்டு மென்று அறிவிப்பு பதாகைகள் வைக்கப்பட்டுள்ளது. ஆனால் மோட்டார் சைக்கிளில் சென்ற லெட்சுமணன், விஜய் இருவரும் வேகமாக சென்றதே விபத்துக்கு காரணம் என்று தெரிய வந்துள்ளது.

Tags:    

Similar News