செய்திகள்
கொள்ளை

துடியலூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 16 பவுன் நகை திருட்டு

Published On 2019-10-08 10:37 GMT   |   Update On 2019-10-08 10:37 GMT
கோவை மாவட்டம் துடியலூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 16 பவுன் நகை திருடிய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கவுண்டம்பாளையம்:

கோவை கவுண்டர்மில்ஸ் சுப்பிரமணியம்பாளையம் பாரதி கார்டனை சேர்ந்தவர் நந்தகுமார் (வயது 53). இவர் கடந்த 1-ந்தேதி குடும்பத்துடன் விக்கிரவாண்டிக்கு சென்றார். அங்கு வேலை முடிந்த பின்னர் சம்பவத்தன்று வீடு திரும்பினார்.

அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவும் உடைக்கப்பட்டிருந்தது. பீரோவை பார்த்தபோது அதில் இருந்த 16 பவுன் நகை திருட்டுபோயிருப்பது தெரியவந்தது.

இது குறித்து அவர் துடியலூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமிரா காட்சி பதிவுகள் மூலம் கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.

கோவை பீளமேட்டை சேர்ந்தவர் ரூபேஷ் ஜெக்ரிக். சம்பவத்தன்று இவர் தனது உறவினர் திருமணத்திற்காக ஊட்டி சென்றார். பின் வீடு திரும்பியபோது அவரது வீட்டு கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது அங்கு இருந்த 6 பவுன் தங்க நகை திருட்டு போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து ரூபேஷ் ஜெக்ரிக் பீளமேடு போலீசில் புகார் தெரிவித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து தங்க நகையை திருடிச் சென்ற மர்ம நபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்

கோவை சூலூர் பாப்பம்பட்டியை சேர்ந்தவர் செல்வராஜ் சம்பவத்தன்று இவர் காந்திபுரம் பஸ் நிலையத்தில் பஸ்சில் இருந்து இறங்கி கொண்டிருந்த போது அங்கிருந்த வாலிபர் ஒருவர் அவரது பாக்கெட்டில் இருந்த செல்போன் எடுத்து ஓட முயற்சி செய்தார். அதை கண்டு செல்வராஜ் அதிர்ச்சி அடைந்தார். பின் சத்தம் போட்டு பொதுமக்கள் உதவியுடன் அந்த வாலிபரை பிடித்து காட்டூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீஸ் விசாரணையில் அவர் கவுண்டம்பாளையத்தை சேர்ந்த தாஸ் என்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்

கோவை மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் ஜெகன் (வயது 37) சம்பவத்தன்று இவர் வீட்டை பூட்டி விட்டு அருகிலுள்ள கோவிலுக்கு சென்றார். பின் வீடு திரும்பிய போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது அங்கிருந்த பீரோவை உடைத்த மர்ம நபர் அதில் இருந்த பணத்தை திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து அவர் மேட்டுப்பாளையம் போலீசில் புகார் தெரிவித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் மேட்டுப்பாளையம் திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த பிரசாந்த் (வயது 19) என்பவர் வீட்டை உடைத்து திருடியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Tags:    

Similar News