செய்திகள்
கைது

தாராபுரம் அருகே இளம்பெண் தீக்குளித்து தற்கொலை முயற்சி: கணவர் கைது

Published On 2019-10-01 11:00 GMT   |   Update On 2019-10-01 11:00 GMT
தாராபுரம் அருகே கணவருடன் ஏற்பட்ட தகராறில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தாராபுரம்:

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே தாளக்கரை பகுதியை சேர்ந்தவர் ஊமையன் என்கிற சுப்பிரமணி(வயது 45). இவர் ஏற்கனவே திருமணாகி முதல் மனைவி பிரிந்து சென்று விட்டார்.

இந்த நிலையில் ஊமையன் மதுரையை சேர்ந்த முருகலட்சுமி(35) என்ற பெண்ணுடன் திருமணம் செய்யாமல் கடந்த 8 வருடமாக குடும்பம் நடத்தி வருகிறார். இருவரும் கூலி வேலை செய்து வருகின்றனர்.ஊமையன் தினமும் முருகலட்சுமியிடம் குடிக்க பணம் கேட்டு வந்துள்ளார். இதனால் அவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இன்று காலையும் ஊமையன் முருகலட்சுமியிடம் குடிக்க பணம் கேட்டுள்ளார். ஆனால் முருகலட்சுமி என்னிடம் பணம் இல்லை என்றார். இதனால் ஆத்திரமடைந்த ஊமையன் மனைவியை தாக்கி விட்டு வெளியில் சென்று விட்டார்.

இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த முருகலட்சுமி தனது உடலில் மண்எண்ணையை ஊற்றி தீ வைத்து கொண்டார். இதில் அவரது உடல் முழுவதும் தீப்பிடித்து எரிந்தது. வலி தாங்க முடியாத முருகலட்சுமி அலறி சத்தம்போட்டார். அவரது சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து அவரை மீட்டனர். மேலும் ஆம்புலன்ஸ்சுக்கு தகவல் கொடுத்தனர். ஆனால் வெகுநேரமாகியும் ஆம்புலன்ஸ் வரவில்லை.

இதையடுத்து மினி சரக்குவேன் மூலம் முருகலட்சுமியை சிகிச்சைக்காக தாராபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின் மேல்சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவர் 95 சதவீத தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து ஊதியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஊமையன் என்கிற சுப்பிரமணியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News