திருவண்ணாமலை அருகே விவசாயி வீட்டில் 17 பவுன் நகை ரூ.2 லட்சம் கொள்ளை
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை அடுத்த கீழ்படூர் கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ் விவசாயி.இவர் விவசாய வேலைகளுக்காக நேற்று வங்கியில் இருந்து ரூ.2 லட்சத்தை எடுத்து வந்து தனது வீட்டில் உள்ள பிரோவில் வைத்துள்ளார்.
இரவு உணவை முடித்துவிட்டு செல்வராஜ் மற்றும் அவரது குடும்பத்தினர் வீட்டின் வெளியே படுத்து தூங்கினர்.இதனை அறிந்த மர்ம நபர்கள் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து வீட்டில் உள்ளே இருந்த சாவியை எடுத்து பீரோவில் இருந்த 17 பவுன் தங்க நகை மற்றும் ரூ.2 லட்சத்து 31 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.
காலையில் வீட்டின் உள்ளே சென்ற போது பீரோ உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த செல்வராஜ் கொள்ளை சம்பவம் குறித்து திருவண்ணாமலை தாலுக்கா போலீசாருக்கு தகவல் அளித்தார். டி.எஸ்.பி. அண்ணாதுரை, இன்ஸ்பெக்டர் கோவிந்த சாமி கொள்ளை நடந்த வீட்டில் சோதனை நடத்தினர்.
இந்த கொள்ளை சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து கொள்ளையர்கள் யார் என்று போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.