செய்திகள்
குழந்தை புதைத்த இடத்தை அடையாளம் காட்டிய தாய்

தாயால் கொன்று புதைக்கப்பட்ட குழந்தை உடல் தோண்டி எடுப்பு

Published On 2019-09-30 17:23 GMT   |   Update On 2019-09-30 17:23 GMT
ஆரணி அருகே தாயும் கள்ளக்காதலனும் சேர்ந்து கொன்ற குழந்தையின் உடலை போலீசார் தோண்டி எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆரணி:

ஆரணி அடுத்த சேவூரைசேர்ந்தவர் குமார் கூலித் தொழிலாளி. இவருடைய மனைவி சோலையம்மாள் (வயது 35). இவர்களுக்கு ஒரு மகள் 3 ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் சோலையம்மாள் மீண்டும் கர்ப்பமானார். கடந்த 15&ந் தேதி சோலையம்மாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதனையடுத்து அக்ரபாளையத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். பின்னர் ஆரணி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.

சோலையம்மாளுக்கும் அவரது கணவரின் அண்ணன் பாபுவுக்கும் கள்ளத்தொடர்பு இருந்தது. தற்போது பிறந்த குழந்தையால் குடும்பத்தில் தகராறு ஏற்படும் என்று நினைத்து பாபுவும் சோலையம்மாளும் குழந்தையை தூக்கிக் கொண்டு ஆஸ்பத்திரியில் இருந்து மாயமானார்கள். இது பற்றி டாக்டர்கள் அளித்த புகாரின் பேரில் ஆரணி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்களை தேடி வந்தனர். இந்த நிலையில் சேவூர் வி.ஏ.ஓ. அலுவலகத்தில் சோலையம்மாளும், பாபுவும் சரணடைந்தனர்.

அவர்கள் பச்சிளம் குழந்தையை கொலை செய்து புதைத்து விட்டதாக தெரிவித்தனர். இதனையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர். விசாரணையில் வேலூர் மெயின் ரோட்டில் சேவூர் அருகே உள்ள விவசாய நிலத்தில் குழந்தையை கொன்று புதைத்தது தெரிய வந்தது. இன்று காலை குழந்தை புதைக்கப்பட்ட இடத்தை சோலையம்மாள் அடையாளம் காட்டினார். தாசில்தார் (பொறுப்பு) பாலாஜி தலைமையில் குழந்தை உடல் தோண்டி எடுக்கப்பட்டது.

குழந்தையின் பிணத்தை பார்த்து சோலையம்மாளின் கணவர் குமார் கதறி அழுதார். திருவண்ணாமலை மருத்துவக் குழுவினர் அங்கேயே குழந்தை உடலை பிரேத பரிசோதனை செய்தனர். பின்னர் குழந்தை உடல் தந்தை குமாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
Tags:    

Similar News