செய்திகள்
நாராயணசாமி

கவர்னர் கிரண்பேடி மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு- நாராயணசாமி அறிவிப்பு

Published On 2019-09-29 16:06 GMT   |   Update On 2019-09-29 16:06 GMT
அரசின் அன்றாட நடவடிக்கைகளில் தலையிட்டால் கவர்னர் கிரண்பேடி மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என்று முதல்- அமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.

புதுச்சேரி:

முதல் - அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

புதுவை அரசின் அன்றாட நடவடிக்கைகளில் தலையிடுவதற்கும், ஆவணங்களை கோருவதற்கும் கவர்னர் கிரண்பேடிக்கு அதிகாரம் வழங்கி மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது.

மத்திய அரசின் இந்த அறிவிப்பு சட்டவிரோதமானது. அதை ரத்து செய்ய வேண்டும் என்று லட்சுமி நாராயணன் எம்.எல்.ஏ. சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மகாதேவன் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் அன்றாட செயல்பாடுகளில் தலையிட கவர்னருக்கு அதிகாரம் கிடையாது. மத்திய அரசு பிறப்பித்துள்ள உத்தரவு சட்ட விரோதமானது என கூறி அந்த அறிவிப்பை ரத்து செய்தார்.

இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் மத்திய அரசும், கவர்னர் கிரண்பேடியும் மேல்முறையீடு செய்தனர். அதில் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

இந்த மேல்முறையீடு வழக்கு சென்னை ஐகோர்ட்டில் கடந்த 26-ந் தேதி நீதி பதிகள் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது விசாரணையை அடுத்த மாதம் (அக்டோபர்) 31-ந் தேதிக்கு தள்ளி வைத்தனர். மேலும் அதுவரை தனி நீதிபதி உத்தரவு நடைமுறையில் இருக்கும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


எனவே, கோர்ட்டின் உத்தரவை மீறி புதுவை அரசின் அன்றாட நடவடிக்கைகளில் ஈடுபட்டாலோ, அதிகாரிகளை அழைத்து உத்தரவிட்டாலோ, சமூக வலைதளங்களை பயன்படுத்தினாலோ கவர்னர் கிரண்பேடி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர தயாராக உள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News