செய்திகள்
அரூர் அருகே டாக்டர் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.1.70 லட்சம் கொள்ளை
அரூர் அருகே டாக்டர் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.1 லட்சத்து 70 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டம் அரூரை அடுத்த தொட்டம் பட்டி ஈ.பி.காலனியைச் சேர்ந்தவர் அருண் (வயது33). டாக்டரான இவர் கடந்த 25-ந் தேதி வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றார். பின்னர் நள்ளிரவு 1 மணியளவில் அவர் மீண்டும் வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தார்.
அப்போது வீட்டின் கதவில் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் உள்ளே சென்று பார்த்தபோது பெட்டியில் வைத்திருந்த ரூ.1லட்சத்து 70 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.
இது குறித்து அருண் அரூர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் சந்திரன், கோவிந்தராசன் மற்றும் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.