செய்திகள்
கைது

களியக்காவிளையில் கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது

Published On 2019-09-27 10:06 GMT   |   Update On 2019-09-27 10:06 GMT
களியக்காவிளையில் கஞ்சா வைத்திருந்த வாலிபரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 1¼ கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து கஞ்சா விற்பவர்களை கண்காணித்து கைது செய்ய போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டது.

மேலும் தனிப்படைகளும் அமைக்கப்பட்டது. அவர்கள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். அதில் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த கும்பலை கைது செய்தனர்.

தொடர்ந்து கஞ்சா விற்பவர்களையும் கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று களியக்காவிளை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மோகன அய்யர் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அவர்கள் களியக்காவிளை மீன் சந்தை அருகே வரும்போது அங்கு சந்தேகப்படும்படியாக வாலிபர் ஒருவர் நின்று கொண்டிருந்தார்.

போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தியதில் அவர் அதே பகுதியை சேர்ந்த ரீகன் (வயது 32) என்பது தெரிய வந்தது. தொடர்ந்து போலீசார் அவரை சோதனை செய்தபோது அவர் கஞ்சா வைத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவரிடம் இருந்த 1¼ கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.

Tags:    

Similar News