வல்லம்:
தஞ்சை அருகே உள்ள புதுக்குடி சமத்துவபுரத்தில் 500-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்கு வசிப்பவர்கள் பொது குழாய் மூலம் குடிநீர் பிடித்து வருகின்றனர்.
நேற்று வழக்கம் போல சமத்துவபுரத்தில் வசிக்கும் பெண்கள் பலரும் குழாயில் குடிநீர் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த ஞான ஆச்சாரி என்பவரின் மகள் மியூசி (வயது 29) என்பவரும் குடிநீர் பிடிக்க வந்துள்ளார். இதைத்தொடர்ந்து சமத்துவபுரத்தை சேர்ந்த ராபர்ட் ராஜாவின் மனைவி சுசிலா (30) அங்கு வந்துள்ளார். அப்போது சுசிலாவுக்கும் மியூசிக்கும் இடையே திடீரென தகராறு ஏற்பட்டது. இதில் மியூசி ஆத்திரம் அடைந்து சுசிலாவை கன்னத்தில் அறைந்து தாக்கி உள்ளார்.
இதுகுறித்து சுசிலா செங்கிப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் மியூசி மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.