செய்திகள்
சூளகிரி அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்
சூளகிரி அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த மறியலால் அந்த பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சூளகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியை அடுத்த கும்பளம் சாலையில் அமைந்துள்ள கடத்தூர் பகுதியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் பெத்த சிகலபள்ளி ஊராட்சி சார்பில் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கடத்தூர் பகுதியில் கடந்த ஒரு மாதமாக குடிநீர் சரிவர ஊராட்சி சார்பில் விநியோகிவில்லை. அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் அவர்கள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த அந்த பகுதியை சேர்ந்த பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் நூற்றுக்கும் மேற்பட்டோர் கும்பளம் சாலையில் இன்று காலை திரண்டு வந்தனர். அங்கு அவர்கள் திடீரென்று மறியலில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவலறிந்த சூளகிரி போலீஸ் இன்ஸ் பெக்டர் முத்துகிருஷ்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர் ராமசந்திரன், தாசில்தார் ரெஜினா மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர். இந்த மறியலால் அந்த பகுதியில் சுமார் ஒருமணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.