ஒரத்தநாடு அருகே ஓடும் பஸ்சில் ஜேப்படி செய்த பெண் கைது
ஒரத்தநாடு:
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே பாச்சூரை சேர்ந்தவர் ரேணுகா (வயது 50). இவரும், அவரது மகள் ரஞ்சிதா என்பவரும் நேற்று மாலை செல்லம்பட்டியில் இருந்து மன்னார்குடி செல்லும் தனியார் பஸ்சில் சென்றனர். அந்த பஸ் ஒரத்தநாடு வந்தபோது ரேணுகா வைத்திருந்த பர்ஸ் மாயமாகிவிட்டது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் அவரது அருகில் பர்தா அணிந்து நின்ற பெண் மீது சந்தேகமடைந்து அவர் வைத்திருந்த பொருட்களை வாங்கி பார்த்தபோது அதில் தனது பர்ஸ் இருப்பதை கண்டுபிடித்தார். அதில் ரூ.1500 இருந்ததாக கூறப்படுகிறது.
இதுபற்றி ரேணுகா சக பயணிகளிடம் கூறியதை தொடர்ந்து ஜேப்படி செய்த பெண்ணை பிடித்து ஒரத்தநாடு போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் அந்த பெண் மன்னார்குடியை சேர்ந்த பகருனிஷா (35) என்பதும், அவர் மீது பல போலீஸ் நிலையங்களில் ஜேப்படி செய்தது தொடர்பாக வழக்கு இருப்பதும் தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து பகருனிஷாவை கைது செய்து நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.