செய்திகள்
தற்கொலை

மது குடிப்பதை மனைவி கண்டித்ததால் விவசாயி தற்கொலை

Published On 2019-09-09 16:14 GMT   |   Update On 2019-09-09 16:14 GMT
கள்ளப்பெரம்பூர் அருகே மது குடிப்பதை மனைவி கண்டித்ததால் விவசாயி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வல்லம்:

தஞ்சையை அடுத்த கள்ளப்பெரம்பூர் மெயின் ரோட்டை சேர்ந்தவர் முருகானந்தம் (வயது36), விவசாயி. இவரது மனைவி தமிழ்மணி (32). இவர்களுக்கு ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தைகள் இருவர் உள்ளனர். முருகானந்தத்திற்கு குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது. இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. கணவரிடம் குடிபழக்கத்தை கைவிட கூறி மனைவி வற்புறுத்தி வந்தார். 

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு முருகானந்தம் மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். குடித்து விட்டு வந்த முருகானந்தத்தை அவரது மனைவி மீண்டும் கண்டித்துள்ளார். இதனால் இவர்களுக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து நேற்று அதிகாலை முருகானந்தத்தின் மனைவி தமிழ்மணி வீட்டு கதவை திறந்து வெளியே வந்துள்ளார். அப்போது முருகானந்தம் வீட்டு வாசலில் உள்ள மரத்தில் தூக்கில் பிணமாக தொங்கி உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த தமிழ்மணி மற்றும் அக்கம் பக்கத்தினர் உடனடியாக கள்ளப்பெரம்பூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். 

சம்பவ இடத்திற்கு வந்த கள்ளப்பெரம்பூர் போலீசார் முருகானந்த்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து முருகானந்தத்தின் மனைவி தமிழ்மணி கொடுத்த புகாரின் பேரில் கள்ளப்பெரம்பூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News