திருத்துறைப்பூண்டியில் பஸ் மோதி தொழிலாளி தலை துண்டாகி பலி
திருத்துறைப்பூண்டி:
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நெடும் பலம் கோவில் தோப்பை சேர்ந்தவர் கணேசன் (வயது 47). இவர் ஓட்டல் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் நேற்று மதியம் கணேசன், காய்கறிகள் வாங்கிக்கொண்டு சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது நாகையில் இருந்து பட்டுக்கோட்டை நோக்கி வந்த ஒரு தனியார் பஸ், சைக்கிள் மீது மோதியது. இதில் கணேசன் நிலைதடுமாறி கீழே விழுந்தார். அந்த சமயத்தில் பஸ்சின் பின்சக்கரத்தில் கணேசன் தலை சிக்கி துண்டானது. இதில் ரத்தவெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே அவர் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். விபத்தை ஏற்படுத்திய பஸ் டிரைவர், அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.
இதுகுறித்து திருத்துறைப்பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து கணேசன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பஸ் மோதிய தொழிலாளி பலியான சம்பவம் திருத்துறைப்பூண்டி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.