செய்திகள்
செல்லூர் ராஜூ

ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டம் தமிழகத்தில் நிறைவேற்றப்படும்- செல்லூர் ராஜூ

Published On 2019-09-06 02:19 GMT   |   Update On 2019-09-06 02:19 GMT
‘ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு’ திட்டம் தமிழகத்தில் உறுதியாக நிறைவேற்றப்படும் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.
சென்னை :

போரூர், லட்சுமி நகரில் அமைக்கப்பட்ட சென்னை மத்திய கூட்டுறவு வங்கியின் 70-வது கிளையின் திறப்பு விழா நடைபெற்றது. இதை கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்து கொண்டு திறந்து வைத்தார். பின்னர் அவர் 279 பயனாளிகளுக்கு, ரூ.2 கோடியே 35 லட்சத்து 43 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் பேசும்போது, ‘ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு’ திட்டம் தமிழகத்தில் நிச்சயம் நிறைவேற்றப்படும். அதனால் தமிழக மக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது. இந்தியாவிலேயே பொதுமக்களுக்கு இலவச அரிசி கொடுக்கும் மாநிலம் தமிழ்நாடு தான். தமிழ்நாட்டில் வசிக்கும் மற்ற மாநிலத்தை சேர்ந்தவர்கள் ரேஷன் பொருட்களை வாங்க வேண்டுமென்றால், அவர்களின் சொந்த மாநிலத்தின் விதிமுறையின் படியே இங்கு வாங்க முடியும்.



புதிதாக வேறு மாநிலங்களிலிருந்து ரேஷன் பொருட்கள் வாங்குபவரின் குடும்ப அட்டைகள் ஆன்லைன் மூலம் கணக்கெடுத்து கொள்ளப்படும். பின்னர், அவை அனைத்தும் மத்தியத் தொகுப்புக்கு அனுப்பப்பட்டு அவர்களுக்கான அரிசி பெற்றுத்தரப்படும். இதனால் தமிழ்நாட்டில் ரேஷன் பொருட்களுக்கு தட்டுப்பாடு எதுவும் ஏற்படாது என்று கூறினார்.

நிகழ்ச்சியில், ஊரக தொழில்துறை அமைச்சர் பென்ஜமின், அலெக்சாண்டர் எம்.எல்.ஏ., மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் வாலாஜாபாத் கணேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News