செய்திகள்
பென்னாகரம் அருகே மின்சாரம் தாக்கி விவசாயி பலி
பென்னாகரம் அருகே தோட்டத்தில் நடந்து சென்ற விவசாயி மின்சார வேலியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தை அடுத்த பூனேகுண்டு காட்டுக்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் சின்னசாமி (வயது 45), விவசாயி.
நேற்று இவர் பக்கத்து தோட்டத்தில் நடந்து சென்றார். அப்போது அந்த தோட்டத்தில் நிலக்கடலை பயிரை காட்டுப்பன்றிகள் மேய்ந்து விடாமல் தடுக்க மின்சார வேலி அமைக்கப்பட்டு இருந்தது. அதை கவனிக்காமல் கடந்து சென்றார். அப்போது அவர் மீது மின்சாரம் தாக்கியது. உடல்கருகிய நிலையில் அவரை பென்னாகரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். ஆனால் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.
இது குறித்து பென்னாகரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.