சண்முகாபுரத்தில் திருமண ஏக்கத்தில் வாலிபர் தற்கொலை
புதுச்சேரி:
புதுவை சண்முகாபுரம் மாணிக்க செட்டியார் நகர் முதல் குறுக்கு தெருவை சேர்ந்தவர் காசிநாதன். இவரது மனைவி ஜெயந்தி இவர்களது மகன் செந்தில் குமார் (வயது 34). இவர் பிளம்பர் வேலை செய்து வந்தார்.
இவர், தனது தாய் ஜெயந்தியிடம் தனக்கு திருமணம் செய்துவைக் கும்படி வலியுறுத்தி வந்தார். அதற்கு ஜெயந்தியும் திருமணம் செய்து வைப்பதாக கூறி வந்தார். ஆனால், இதற்கான வேலையில் ஜெயந்தி ஈடுபடவில்லை என கூறப்படுகிறது.
இதனால் செந்தில்குமார் மனவருத்தத்தில் இருந்து வந்தார். இந்த நிலையில் நேற்று ஜெயந்தி மேட்டுப்பாளையத்தில் உள்ள தனியார் தொழிற்சாலைக்கு வேலைக்கு சென்றிருந்த வேளையில் திடீரென செந்தில்குமார் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்து மின்விசிறி கொக்கியில் துப்பட்டாவால் தூக்கு போட்டு தொங்கினார்.
மாலையில் வேலை முடிந்து வீடு திரும்பிய ஜெயந்தி வீட்டில் மகன் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர் இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.