செய்திகள்
தருமபுரி நகர்பகுதியில் பரவலாக சாரல் மழை பெய்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
தர்மபுரி:
தர்மபுரியில் நேற்று காலை முதல் மாலை வரை வெயில் வாட்டி வதைத்தது. இதனைத் தொடர்ந்து மாலையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர் பலத்த காற்று வீசியதுடன் மழையும் பெய்தது.
கடத்தூர், பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடி, அரூர் ஆகிய பகுதிகளில் நேற்று பரவலாக மழை பெய்தது. இதனால் மானாவாரிப் பயிர்களாக பயிரிடப்பட்டுள்ள பருத்தி, சோளம், கம்பு, மரவள்ளி, கடலை, உளுந்து, துவரை, காராமணி உள்ளிட்ட பயிர்களை பயிரிட்டுள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தருமபுரி நகர் பகுதியில் இப்படி தொடர்ந்த மழை சுமார் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக நீடித்தது. இதனால் சாலையில் ஆங்காங்கே மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. சாக்கடை கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டு சாக்கடையில் மழை நீர்நிரம்பி ஆறுபோல் பெருக்கெடுத்து ஓடின. மேலும் மழையுடன் சேர்ந்து பலத்தகாற்று வீசியதால் காந்திநகர் பகுதியில் உள்ள தனியார்பள்ளி முன்பு இருந்த வேப்ப மரம் வேரோடு சாய்ந்து விழுந்தது. அந்த சமயம்யாரும் அந்த வழியாக செல்லாததால் பெரியவிபத்து தவிர்க்கப்பட்டது. மரம் விழுந்ததை அடுத்து அந்தபகுதியில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இன்று காலை வழக்கம்போல் சூரியன் உதித்ததை அடுத்து தருமபுரி நகர்பகுதியில் பரவலாக சாரல் மழை பெய்தது. இன்றும் காலைமுதல் வானம் சற்று மேகமூட்டத்துடன் காணப்பட்டது. எனவே, இன்றும் மழைபெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.