செய்திகள்
கைது

டிக்-டாக் மூலம் பழக்கமான இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை- நெசவு தொழிலாளி கைது

Published On 2019-09-03 10:46 GMT   |   Update On 2019-09-03 10:46 GMT
கிருஷ்ணகிரியில் டிக்-டாக் மூலம் பழக்கமான இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நெசவு தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி பாரதியார் நகரை சேர்ந்தவர் 26 வயது மதிக்கத்தக்க இளம்பெண். இவருக்கு திருமணமாகி 6 ஆண்டுகள் ஆகிறது. குழந்தைகள் இல்லை.

இந்நிலையில் டிக்-டாக் மூலம் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த புஜகானூர் கிராமத்தை சேர்ந்த நெசவு தொழிலாளி மோகன்குமார்(32) என்பவருக்கு கடந்த ஏப்ரல் மாதம் அந்த இளம்பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் இருவரும் செல்போனில் பேசும் அளவிற்கு வளர்ந்து உள்ளது. அப்போது தங்கள் ஊரில் ஒரு கோவில் உள்ளது. அங்கு வந்தால் குடும்ப பிரச்சனை அனைத்தும் தீர்ந்துவிடும் எனக்கூறி மோகன்குமார், இளம்பெண்ணை அழைத்துள்ளார். ஆனால் அவ்வாறு செல்லாததால் தினமும் இளம்பெண்ணுக்கு போன்செய்து ஆபாசமாக பேசி பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று மோகன்குமார், கிருஷ்ணகிரியில் உள்ள இளம்பெண்ணின் வீட்டிற்கு வந்துள்ளார். அங்கு வந்து தன்னுடன் வருமாறு அவரை அழைத்துள்ளார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த மோகன்குமார், இளம்பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

இதுகுறித்து அந்த இளம்பெண் கிருஷ்ணகிரி டவுன் போலீசில் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீஸ் எஸ்.ஐ. ஜெய்கீர்த்தி வழக்குபதிவு செய்து, மோகன்குமாரை கைதுசெய்து விசாரணை நடத்தி வருகிறார்.

கைதான மோகன்குமார் திருமணமாகி மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News