கோவை அருகே 15 வயதில் குழந்தை பெற்ற சிறுமி- ஏமாற்றி திருமணம் செய்த வாலிபர் கைது
கோவை:
கேரள மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்த 15 வயது சிறுமி கடந்த ஆண்டு ஓணம் பண்டிகை கொண்டாடுவதற்காக கோவை கே.ஜி. சாவடியில் உள்ள தனது சகோதரி வீட்டுக்கு வந்து இருந்தார். அப்போது அந்த பகுதியில் வசித்து வந்த கார்த்திக் (வயது 23) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. அவர் சிறுமியிடம் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதில் சிறுமி கர்ப்பமானார். பின்னர் சிறுமியை கார்த்திக் பழனிக்கு அழைத்து சென்று திருமணம் செய்தார்.
இந்த நிலையில் சிறுமிக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது. இதனை அறிந்த அந்த பகுதியை சேர்ந்தவர்கள் இது குறித்து கேரள மாநிலம் வாளையாறு போலீசில் புகார் அளித்தனர்.
வாளையாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த வழக்கை கே.ஜி. சாவடி போலீசுக்கு மாற்றம் செய்து அனுப்பி வைத்தனர்.
வழக்கை பெற்றுக்கொண்ட கே.ஜி. சாவடி போலீசார் 15 வயது சிறுமியை ஏமாற்றி திருமணம் செய்த கார்த்திக்கை கைது செய்தனர். அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.