ரிசர்வ் வங்கி நிதி பெற மத்திய அரசு நிர்ப்பந்தம் - ஜி.ராமகிருஷ்ணன்
வேடசந்தூர்:
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் மார்க்சிஸ்டு கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மத்திய பா.ஜ.க. ஆட்சியில் பொருளாதார வளர்ச்சி இல்லை. ஆட்டோ மொபைல் தொழில் நசிவால் 10 லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர். இதே போல் பல்வேறு தொழில் நிறுவனங்களும் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் இதைப்பற்றி எல்லாம் பிரதமர் மோடி, நிதி அமைச்சர் கவலைப்படுவதாக தெரிய வில்லை. ரிசர்வ் வங்கியின் ரூ.1 லட்சத்து 76 ஆயிரம் கோடி நிதியை மத்திய அரசு நிர்ப்பந்தப்படுத்தி பெற்றுள்ளது. இந்தியாவில் இது வரை நடக்காத அணுகுமுறை இதுவாகும்.
20 மாணவர்களுக்கு குறைவாக உள்ள அரசு பள்ளிகளை மூட வேண்டும் என மத்திய கல்விக் கொள்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. 3 முதல் 18 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு தரமான கட்டாய கல்வியை வழங்குவோம் என மத்திய அரசு கூறி வருகிறது.
20 மாணவர்களுக்கு குறைவான பள்ளிகளை மூடி விட்டு எப்படி தரமான கல்வியை அனைத்து மாணவர்களுக்கும் தர முடியும்? பள்ளியில் சமஸ்கிருதம் திணிப்பு கைவிடப்பட வேண்டும். நாடு முழுவதும் தரமான அடிப்படை கல்வி அனைத்து மாணவர்களுக்கும் கிடைப்பதை மத்திய மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.