கணவனுடன் தகராறு: வங்கி பெண் ஊழியர் தூக்குபோட்டு தற்கொலை
புதுச்சேரி:
முத்தியால் பேட்டை சிந்து நகரை சேர்ந்தவர் நடன சபாபதி. இவரது மனைவி லதா (வயது 37). இவர்களுக்கு ஆண் குழந்தை உள்ளது.
லதா புதுவையில் உள்ள தேசிய வங்கி ஒன்றில் கிளர்க்காக பணிபுரிந்து வந்தார். நேற்று இரவு லதா வீட்டில் டி.வி. நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டு இருந்தார். அப்போது திடீரென மின்சாரம் தடைபட்டதால் லதா இன்வெட்டர் மூலம் டி.வி. நிகழ்ச்சியை பார்த்தார்.
அப்போது லதாவிடம் அவரது கணவர் நடன சபாபதி இன்வெட்டர் மூலம் டி.வி. நிகழ்ச்சியை பார்க்க வேண்டுமா? என கேள்வி எழுப்பினார். இதனால் கணவன்- மனைவிக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து நடனசபாபதி டி.வி.யை. நிறுத்தி விட்டு படுக்கை அறைக்கு சென்று விட்டார்.
இதனால் விரக்தி அடைந்த லதா தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து வீட்டின் மற்றொரு அறையில் மின் விசிறியில் சேலையால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்த புகாரின் பேரில் முத்தியால் பேட்டை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதேபோல் லாஸ்பேட்டையை அடுத்த பெத்துசெட்டி பேட் விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் மகேஷ் (36). டிரைவர். இவருக்கு வரலட்சுமி என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். மது குடிக்கும் பழக்கம் உள்ள மகேஷ் அடிக்கடி மது குடித்து விட்டு மனைவி மற்றும் குழந்தைகளை அடித்து உதைப்பது வழக்கம்.
அதுபோல் சம்பவத்தன்று மகேஷ் மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்தார். அப்போது மனைவி மற்றும் குழந்தைகளை அடித்து உதைத்து வீட்டை விட்டு விரட்டினார். பின்னர் வீட்டின் கதவை உள்பக்கமாக பூட்டிக்கொண்டு தூக்குபோட்டு தொங்கினார்.
இதையடுத்து வரலட்சுமி அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கணவரை தூக்கில் இருந்து மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு சிகிச்சை பெற்று வந்த மகேஷ் நேற்று சிகிச்சை பலனின்றி இறந்து போனார்.
இதுகுறித்த புகாரின் பேரில் லாஸ்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் கீர்த்தி, ஜாகிர் உசேன் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.