ப.சிதம்பரத்தை ஆதரிக்கும் ஸ்டாலின் மீது மத்திய அரசு வழக்குப்பதிவு செய்ய அன்பழகன் வலியுறுத்தல்
புதுச்சேரி:
புதுவை அ.தி.மு.க. சட்டமன்ற கட்சித்தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ நிருபர்களிடம் கூறியதாவது:-
புதுவையில் இந்த ஆண்டுக்கான பட்ஜெட்டிற்கு மத்திய அரசிடம் அனுமதி பெற முடியாத சூழ்நிலையை முதல்-அமைச்சரும், கவர்னரும் உருவாக்கி உள்ளனர்.
இது புதுவையை களங்கப்படுத்தும் செயல். இந்த ஆண்டு பட்ஜெட்டிற்கு அனுமதி பெறாமல் இருப்பது அரசின் தோல்வியை காட்டுகிறது. ஒவ்வொரு நாளும் முதல்- அமைச்சர் இதுதொடர்பாக ஏதேனும் ஒரு கருத்தை வெளியிட்டு வருகிறார்.
திட்டக்குழு கூட்டத்திற்கு பிறகு மத்திய அரசை அணுகியது, எழுதிய கடிதங்கள், நேரில் சந்திப்பு, பேச்சுவார்த்தை என அனைத்தையும் முதல்- அமைச்சர் வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும்.
எதற்காக டெல்லி சென்றார்கள்? என மக்களுக்கு தெரிய வேண்டும். இதே நிலை தொடர்ந்தால் அரசு நீண்ட நாட்கள் நீடிக்காது. முதல்-அமைச்சர் தொடர்ந்து பொய்களை கூறி வருகிறார்.
புதுவையில் ஆளும் காங்கிரஸ் அரசு தாழ்த்தப்பட்ட, பழங்குடியினத்தை சேர்ந்த, சிறுபான்மை மக்களுக்கு துரோகம் செய்துள்ளது. கடந்த 3 ஆண்டாக இவர்களுக்கு எந்தவித கடனுதவியும் வழங்கவில்லை.
வீடு கட்ட முதல் தவணை பெற்றவர்களுக்கு 2, 3-ம் தவணை தொகை கிடைக்கவில்லை. கல்விக் கடன் பெற்றவர்கள் தொடர்ந்து கடன் பெற முடியவில்லை. இது வரை 800 பேர் கல்வி கடனுக்காக விண்ணப்பித்து பயன்பெறாமல் உள்ளனர்.
கவர்னர் இதுதொடர்பாக தடை ஆணையை வெளியிட்டுள்ளார். இந்த தடை ஆணையை நீக்க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஒன்றரை ஆண்டாக மக்கள் கடன்பெற முடியாமல் தவித்து வருகின்றனர்.
பொருளாதார குற்றவாளியான ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் செய்த முறைகேடுகள் ஊர்ஜிதமாகி உள்ளதால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆனால், அவரை மு.க.ஸ்டாலின் ஆதரித்து வருகிறார். இதற்காக மு.க.ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.