திருவள்ளூர் அருகே 2 வீடுகளில் கொள்ளை
திருவள்ளூர்:
திருவள்ளூர் ராஜாஜிபுரம் பகுதியை சேர்ந்தவர் ஜெயக்குமார். திருத்தணியில் உள்ள டயர் தொழிற்சாலையில் ஊழியராக உள்ளார்.
இவரது மனைவி தேவி.திருவள்ளூரில் உள்ள மரக் கடையில் கணக்காளராக வேலை செய்து வருகிறார்.
நேற்று காலை இருவரும் வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்றனர். பின்னர் மாலையில் திரும்பி வந்தபோது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
பீரோவில் இருந்த 26 பவுன் தங்க நகை மற்றும் ரூ. 11 ஆயிரம் ரொக்கம் கொள்ளை போய் இருப்பது தெரிந்தது. இதுகுறித்து திருவள்ளூர் டவுன் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி விசாரணை நடத்தி வருகிறார்.
திருவள்ளூரை அடுத்த தொடுக்காடு ஓம் நகரை சேர்ந்தவர் யுவராஜ். மதுர மங்கலத்தில் உள்ள டயர் தொழிற்சாலை ஊழியர். இவரது மனைவி அதே பகுதியில் பேன்ஸி ஸ்டோர் நடத்தி வருகிறார்.
நேற்று காலை வீட்டை பூட்டிவிட்டு இருவரும் வெளியே சென்றனர். இதனை நோட்டமிட்ட மர்ம கும்பல் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 15 பவுன் நகை, ரூ. 7ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்று விட்டனர்.
இதுகுறித்து மப்பேடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.