முத்துப்பேட்டையில் ஓடும் பஸ்சில் மூதாட்டியிடம் 6 பவுன் நகை பறிப்பு
முத்துப்பேட்டை:
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த தில்லைவிளாகம் அரமங்காடு கிராமத்தை சேர்ந்தவர் ஜெயபால் மனைவி விஜயலட்சுமி (வயது65). இவர் உறவினர் வீட்டுக்கு செல்ல அரமங்காட்டிலிருந்து தனியார் பஸ் மூலம் ஏறி முத்துப்பேட்டைக்கு சென்றுக்கொண்டிருந்தார்.
முத்துப்பேட்டை சுங்க இலாகா அலுவலகம் அருகே பஸ் சென்றுக்கொண்டிருந்தபோது பேரூந்தில் இருந்த ஒரு பெண், விஜயலட்சுமியின் கழுத்தில் இருந்த 6பவுன் தங்க செயினை பறித்துள்ளார். இதனைக்கண்டு சுதாரித்த விஜயலட்சுமி கூச்சலிட்டார்.
அப்போது பஸ்சில் இருந்த பயணிகள் சூழ்ந்து செயின் திருடிய பெண்ணை சுற்றிவளைத்து பிடித்து முத்துப்பேட்டை போலீசில் ஒப்படைத்தனர். பின்னர் விஜயலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த இன்ஸ்பெக்டர் ராஜேஷ், சப் -இன்ஸ்பெக்டர் ராஜேஷ்கண்ணா ஆகியோர் பிடிப்பட்ட பெண்ணை விசாரணை செய்தபோது அவர், திருச்சி சமயபுரம் மஞ்சுநாதன் மனைவி மேரி(32) என்பதும் இவர் விஜயலட்சுமியிடம் 6பவுன் தங்க செயினை திருடியதும் தெரியவந்தது.
இதனையடுத்து தங்க செயினை பறிமுதல் செய்த போலீசார் திருடிய மேரியை கைது செய்து திருத்துறைப்பூண்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.