மதுரை அருகே பேரையூரில் பத்ரகாளியம்மன் கோவில் உண்டியல் பணம் கொள்ளை
பேரையூர்:
மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உள்ள பேரையூரில் பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான இந்த கோவிலில் விசேஷ நாட்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். கோவில் அறங்காவலராக நித்யகல்யாணி என்பவர் உள்ளார்.
இந்த நிலையில் நேற்று மதியம் கோவில் பூட்டப்பட்டிருந்த நிலையில் சுவர் ஏறிக் குதித்த மர்ம நபர்கள் அங்கிருந்த உண்டியலை உடைத்தனர். பின்னர் அதில் இருந்த ரூபாய் நோட்டுகளை திருடிக் கொண்டு தப்பினர்.
மாலையில் கோவிலை திறக்க வந்தபோது உண்டியல் பணம் கொள்ளை போனது தெரியவந்தது.
இது குறித்து நித்யகல்யாணி, பேரையூர் போலீசில் புகார் செய்தார்.போலீசார் வழக்குப்பதிவு செய்துபட்டப் பகலில் கோவிலுக்குள் புகுந்து உண்டியல் பணத்தை திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
உண்டியலில் இருந்து 20 ஆயிரம் ரூபாய் திருடு போயிருக்கலாம் என கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.