செய்திகள்
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன்

15 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை - வானிலை ஆய்வு மையம் தகவல்

Published On 2019-08-20 08:04 GMT   |   Update On 2019-08-20 08:04 GMT
திருவாரூர், நாகப்பட்டினம், அரியலூர் உள்ளிட்ட 15 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை மைய இயக்குனர் தெரிவித்துள்ளார்.
சென்னை:

தமிழகத்தின் ஒருசில பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது.

மேலும் 2 நாட்களுக்கு பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்து உள்ளது.

இதுகுறித்து வானிலை மைய இயக்குனர் புவியரசன் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழக கரையோரத்திற்கு அருகில் வளி மண்டலத்தின் மேலடுக்கில் காற்று சங்கமம் ஆவதால் அடுத்த 2 நாட்களுக்கு பெரும்பாலான மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.



திருவாரூர், நாகப்பட்டினம், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, கடலூர், காரைக்கால், விழுப்புரம், புதுச்சேரி, திருவண்ணாமலை, வேலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

சென்னையில் வானம் பொதுவாக மேக மூட்டத்துடன் காணப்படும். மழையோ, இடியுடன் கூடிய மழையோ நகரின் சில பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரத்தில் பெய்யும்.

கடந்த 24 மணி நேரத்தில் திருச்சியில் அதிகபட்சமாக 13 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. ராயக்கோட்டை, வாழப்பாடி தலா 8 செ.மீ., லால்குடி, பெனுகுண்டாபுரம், பெரம்பலூர், வேலூர் தலா 7 செ.மீ. மழை பெய்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News