நாகர்கோவிலில் தோழியிடம் நகை பறித்த இளம்பெண் கைது
நாகர்கோவில்:
நாகர்கோவில் வெட்டூர்ணிமடம் கிறிஸ்துநகரைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி சந்திரா (வயது 30). இவர் அங்குள்ள மசாஜ் சென்டரில் துப்புரவு பணியாளராக வேலை பார்த்து வருகிறார்.
அதே மசாஜ் சென்டரில் ஆலஞ்சி பகுதியைச் சேர்ந்த காயத்ரி (24) என்ற பெண்ணும் வேலை பார்த்து வந்தார். ஒரே இடத்தில் பணியாற்றியதால் சந்திராவும், காயத்ரியும் தோழிகளாக பழகி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று இரவு காயத்ரி, சந்திராவுக்கு செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார். எனக்கும், எனது கணவருக்கும் பிரச்சினை, எனவே இன்று ஒருநாள் இரவு உனது வீட்டில் தங்கிக் கொள்கிறேன் என காயத்ரி கூறினார். சந்திராவும் அதற்கு சம்மதம் தெரிவித்து தனது வீட்டுக்கு வரும்படி சொன்னார்.
சந்திரா வீட்டுக்கு வந்த காயத்ரி பர்க்கர் மற்றும் பாதாம் பால் வாங்கி வந்தார். உனக்காக தான் வாங்கி வந்தேன். இதனை நீ சாப்பிடு என சந்திராவிடம் அவர் கொடுத்தார். அதனை சாப்பிட்ட சந்திரா சிறிது நேரத்தில் மயக்கம் அடைந்தார். மயக்கம் தெளிந்து விழித்தெழுந்து பார்த்தபோது காயத்ரியை காணவில்லை, மேலும் அவர் அணிந்திருந்த 4 பவுன் தங்கச் சங்கிலியும் மாயமாகி இருந்தது.
இதுபற்றி சந்திரா வடசேரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் நடத்திய விசாரணையில் காயத்ரி, பர்க்கரில் மயக்க மருந்து கலந்து சந்திராவுக்கு கொடுத்து அவர் மயங்கியதும், நகையை பறித்துச் சென்றது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் அனில்குமார், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராஜன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து காயத்ரியை தேடினர். அப்போது அவர் தக்கலை பகுதியில் பதுங்கி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.