செய்திகள்
கொலை

குடும்ப தகராறில் மனைவியை தாக்கியதால் மருமகனை கத்தியால் குத்தி கொன்ற மாமனார்

Published On 2019-08-18 14:14 GMT   |   Update On 2019-08-18 14:14 GMT
குடும்ப தகராறில் மனைவியை தாக்கியதால் மருமகனை மாமனார் குத்தி கொலை செய்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கவுண்டம்பாளையம்:

கோவை கவுண்டம்பாளையம் அருகே உள்ள செட்டியார் அம்மா தோட்டத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 23). பெயிண்டர்.

கடந்த 1 வருடத்துக்கு முன்பு இவருக்கும் சக்தி நகரை சேர்ந்த தங்கமணி குமார் என்பவரது மகள் சாலினி என்பவருக்கும் திருமணம் நடந்தது. 9 மாத கர்ப்பிணியாக இருந்த சாலினிக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து அவரது மாமியார் உமாராணி சாலினியை சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார். பின்னர் வீட்டுக்கு திரும்பினார்.

சம்பவத்தன்று சாலினியை பார்ப்பதற்காக அவரது தாய் மீனா வீட்டிற்கு வந்தார். கடந்த 1 மாதமாக வேலைக்கு ஏதும் செல்லாமல் ராஜேந்திரன் வீட்டில் இருந்தார்.

மீனா தனது மகளுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி செய்ய வேண்டும். நீங்கள் வேலைக்கு செல்லாமல் இருந்தால் எப்படி நிகழ்ச்சி நடத்துவது, நீங்கள் எப்படி எனது மகளை காப்பாற்றுவீர்கள் என்று மருமகனிடம் கேட்டார். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ராஜேந்திரன் மாமியாரை தாக்கினார்,

இது குறித்து அவர் தனது கணவர் தங்கமணி குமாருக்கு செல்போன் மூலமாக தகவல் தெரிவித்தார். மனைவியை தாக்கியதை கேட்ட அவர் விரைந்து ராஜேந்திரன் வீட்டுக்கு வந்தார். பின்னர் தான் மறைத்து வைத்து இருந்த கத்தியை எடுத்து மருமகன் என்று கூட பார்க்காமல் ராஜேந்திரனின் வயிற்றில் குத்தினார். இதில் ரத்த வெள்ளத்தில் அவர் கீழே சரிந்தார். இதனை பார்த்த தங்கமணி குமார் அங்கு இருந்து தப்பிச் சென்றார். ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய ராஜேந்திரனை அக்கம் பக்கத்தினர் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து துடியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மருமகனை கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு தலைமறைவான தங்கமணி குமாரை தேடி வருகிறார்கள்.

மருமகனை மாமனார் குத்தி கொலை செய்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News