ஆரணியில் தொடர்மழை மின்சாரம் தாக்கி வாலிபர் பலி
ஆரணி:
ஆரணி அடுத்த பையூர் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் பாலசுந்தரம் மகன் வெங்கடேசன் (வயது 29). கூலி தொழிலாளி. பையூரில் பெற்றோருடன் குடிசை வீட்டில் வசித்து வந்தார்.
ஞாயிற்றுக்கிழமை என்பதால் வெங்கடேசன் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்தார். அப்பகுதியில் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. தொடர் மழையின் காரணமாக வீட்டில் செல்லும் மின்சார ஓயரில் மின்கசிவு ஏற்பட்டுள்ளது.
அப்போது வெங்கடேசனின் கை மின்ஒயரில் பட்டு மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். அதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் வெங்கடேசனை மீட்டு ஆரணி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வெங்கடேசன் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
ஆரணி தாலுகா போலீசார் விரைந்து வந்து வெங்கடேசன் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மின்சாரம் தாக்கி வாலிபர் பலியான சம்பவம் பையூர் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.