காதலித்து திருமணம் செய்த இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை
தருமபுரி:
விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சியை சேர்ந்தவர் மாதேஸ்வரி (வயது19). இவர் தருமபுரி மாவட்டம், காரிமங்கலத்தை அடுத்துள்ள அனுமந்த புரத்தில் தனது உறவினர் வீட்டிற்கு அடிக்கடி வந்து செல்வார்.
அப்போது அதே பகுதியைச் சேர்ந்த ராஜேஷ்குமார் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.
இதனால் இருவரும் தனது பெற்றோர்களிடம் கூறி கடந்த 1½ வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு 4 மாத ரித்திக் என்ற ஆண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில் மாதேஸ்வரி தனது தாய் வீட்டிற்கு செல்ல வேண்டும் என்று கணவரிடம் கூறினார். ஆனால் அவர் அழைத்து சென்று விடாமல் காலம் தாழ்த்தி வந்தார். இதுகுறித்து நேற்று கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது.
இதனால் மனமுடைந்த மாதேஸ்வரி வீட்டின் கதவை அடைத்து மின் விசிறியில் திடீரென்று தூக்குபோட்டு கொண்டார்.
அப்போது ராஜேஷ் குமார் வீட்டின் வெளியே பேசி கொண்டிருந்த நிலையில் குழந்தை அழுவது சத்தம் கேட்டு அவர் வீட்டின் கதவை தட்டி பார்த்தார். ஆனால் கதவு திறக்கவில்லை.
உடனே பதறி போன அவர் கதவை உடைத்து விட்டு வீட்டிற்குள் சென்றார். அப்போது தூக்கில் தொங்கிய நிலையில் மாதேஸ்வரி உயிருக்கு போராடி கொண்டிருந்தார். உடனே அவரை மீட்டு அனுமந்தபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக மாதேஸ்வரியை தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது தொடர்பாக காரிமங்கலம் போலீசார் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்று மாதேஸ்வரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் இறந்த மாதேஸ்வரிக்கு திருமணமாகி 1½ வருடம் ஆனதால் இந்த சம்பவம் குறித்து தருமபுரி மாவட்ட சப்-கலெக்டர் சிவன்அருள் விசாரணை நடத்தி வருகிறார்.