செய்திகள்
உற்பத்தி செலவு அதிகரித்ததால்தான் பால் விலை உயர்த்தப்பட்டது - முதலமைச்சர் பழனிசாமி
பால் உற்பத்தி செலவு அதிகரித்ததாலேயே பால் விலை உயர்த்தப்பட்டது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார்.
சேலம்:
ஆவின் நிர்வாகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கையை ஏற்று பால் கொள்முதல் விலை உயர்த்தப்பட்டு உள்ளது. நுகர்வோர்களுக்கு தரமான பால் விநியோகம் செய்வதை உறுதிப்படுத்தும் விதமாக விற்பனை விலையும் உயர்த்தப்பட்டுள்ளது. இதையடுத்து, ஆவின் பால் விலை லிட்டருக்கு 6 ரூபாய் உயர்ந்துள்ளது.
பால் கொள்முதல் விலை மற்றும் விற்பனை விலை நாளை மறுநாள் முதல் அமலுக்கு வரும். இந்த விலை உயர்வால் 4.60 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் பயனடைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆவின் பால் விலை உயர்வுக்கு எதிர்க்கட்சி தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில்,முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
சட்டசபையில் அறிவித்தபடி பால் கொள்முதல் மற்றும் விற்பனை விலை உயர்த்தப்பட்டுள்ளது, பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் கடும் நஷ்டத்தில் இயங்கி வருகின்றன. எனவே, உற்பத்தியாளர் நலன் கருதியே ஆவின் பால் விலை உயர்த்தப்பட்டுள்ளது.மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் பால் கொள்முதல் விலை அதிகம்.
மழை அளவை பொறுத்துதான் மேட்டூர் அணையில் நீர் திறப்பு உயர்த்தப்படும் என தெரிவித்தார்.