அய்யம்பேட்டை அருகே மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலி
அய்யம்பேட்டை:
அய்யம்பேட்டை அருகே கோவிலடி நாகூர் மீரான் தெருவைச் சேர்ந்தவர் ரகமதுல்லா (வயது 56). இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். கடந்த 5 நாட்களுக்கு முன்பு தான் சொந்த ஊருக்கு திரும்பியிருந்தார்.
இந்நிலையில் ரகமதுல்லா தனது மொபைட்டில் அய்யம்பேட்டை நோக்கி புறப்பட்டார். தஞ்சை -கும்பகோணம் மெயின் சாலையில் கோவிலடி பஸ் நிறுத்தம் அருகே வந்த போது எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக ரகமத்துல்லா வந்த மொபெட் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ரகமத்துல்லா பலத்த காயம் அடைந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அய்யம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து அய்யம்பேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் முருகேசன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.