செய்திகள்
சஸ்பெண்டு

திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரியில் 5 பேர் பணியிடை நீக்கம்

Published On 2019-08-03 10:12 GMT   |   Update On 2019-08-03 10:12 GMT
திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரியில் 3 செவிலியர்கள் உள்பட 5 பேர் பணியிடை நீக்கம் செய்து மருத்துவக்கல்லூரி முதல்வர் விஜயகுமார் உத்தரவிட்டுள்ளார்.
திருவாரூர்:

திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், பிரசவத்துக்குப் பின்னர் அனுமதிக்கப்பட்ட பெண்ணுக்கு அளித்த தவறான சிகிச்சை காரணமாக உயிரிழந்த விவகாரத்தில், செவிலியர்கள் உட்பட 5 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் பணியில் இருந்த மருத்துவர் மீது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என மருத்துவக் கல்லூரி முதல்வர் விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

திருவாரூர் மாவட்டம், திருக்களம்பூர் பகுதியைச் சேர்ந்த பவிதா என்ற பெண்ணுக்கு கடந்த 24ம் தேதி, குடவாசல் அரசு மருத்துவமனையில் குழந்தை பிறந்தது. இந்நிலையில் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அன்றைய தினமே அனுமதிக்கப்பட்ட பவிதா, நேற்று (1ம் தேதி) உயிரிழந்தார். மருத்துவர்களின் தவறான சிகிச்சையின் காரணமாகவே பவிதா உயிரிழந்ததாக உறவினர்கள் புகார் தெரிவித்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த விவகாரத்தில் விசாரணை நடத்திய மருத்துவக்கல்லூரி முதல்வர் விஜயகுமார் பாதிக்கப்பட்ட நபரிடம் மனிதாபிமானமின்றி நடந்ததாகவும், அவரிடம் பணம் கேட்டு மிரட்டியதும் தெரியவந்ததையடுத்து அப்போது பணியிலிருந்த செவிலியர்கள் உதயகுமாரி, பாரதி, திவ்யா மற்றும் தற்காலிக ஊழியர்கள் ரவிக்குமார், சுந்தர்ராஜன் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

மேலும் பணியிலிருந்த மருத்துவர் லெனின் மீதும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News