செய்திகள்
கைதான வெங்கடாசலம்

சூலூர் அருகே பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: ஒருவர் கைது- 2 பேருக்கு வலை வீச்சு

Published On 2019-08-03 06:10 GMT   |   Update On 2019-08-03 06:10 GMT
கோவை சூலூர் அருகே பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டார். மேலும் 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்
சூலூர்:

கோவை சூலூர் அருகே உள்ள பீடம்பள்ளி பகுதியில் அரசு பள்ளி செயல்பட்டு வருகிறது.

இந்த பள்ளியில் மாவட்ட நிர்வாகம் சார்பில் மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் தீபா மற்றும் பீடம் பள்ளி கிராம நிர்வாக அலுவலர் லோகநாயகி ஆகியோர் தலைமையில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் விழிப்புணர்வு தொடர்பான சிறப்பு வகுப்பு நடந்தது.

இந்த சிறப்பு வகுப்பு முடிந்த பின் சுமார் 25-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவிகள் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் தீபாவை தனியாக சந்தித்து தங்களுக்கு நடுப்பாளையத்தை சேர்ந்த 3 பேர் பள்ளிக்கு வரும்போதும், இயற்கை உபாதைக்கு செல்லும் போதும் அவர்கள் தங்களது ஆடைகளை களைந்து கொன்டு நின்று பாலியல் ரீதியாக தொந்தரவு அளிப்பதாக கூறினர்.

இதனை தொடர்ந்து குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் தீபா மற்றும் கிராம நிர்வாக அலுவலர் லோகநாயகி ஆகியோர் மாணவிகள் கூறிய நபர்கள் குறித்து சூலூர் போலீசில் புகார் அளித்தனர்.

பள்ளி மாணவிகள் அளித்த தகவலின் பேரில் நடுப்பாளையத்தை சேர்ந்த வெங்கடாசலம் (42) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவருக்கு திருமணம் ஆகவில்லை.

மேலும் அதே பகுதியை சேர்ந்த லட்சுமணன் (45) மற்றும் 15 வயது சிறுவன் ஆகிய 2 பேர் தலைமறைவாகி விட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

போலீஸ் விசாரணையில் 15 வயது சிறுவன் பெண்கள் கழிப்பறைக்குள் மறைந்திருந்து மாணவிகளை செல்போனில் ஆபாசமாக படமெடுத்து அவர்களிடம் காண்பித்து பாலியல் தொந்தரவு கொடுத்தது தெரிய வந்தது.

இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த சம்பவம் சூலூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News