செய்திகள்
அரசு பஸ் மோதி விபத்து- சிகிச்சை பலனின்றி முதியவர் மரணம்
மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதிய விபத்தில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
ஊத்தங்கரை:
கிருஷ்ணகிரியை அடுத்துள்ள வரட்டனபள்ளி நாகிசெட்டி (வயது70). இவரது மனைவி சுபத்ரா (65). கடந்த மாதம் 18-ந்தேதி அன்று இவர்கள் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் தனது உறவினர் துக்க நிகழ்ச்சிக்காக மத்தூரை அடுத்துள்ள அத்திகானூர் கிராமத்திற்கு சென்று கொண்டிருந்தனர்.
அப்போது மத்தூர் அருகே கண்ணன்டஅள்ளி பிரிவு சாலையில் வந்த போது திருவண்ணாமலையில் இருந்து பெங்களூரு நோக்கி சென்ற அரசு பஸ் எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே சுபத்ரா பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் படுகாயம் அடைந்த நாகிசெட்டியை அக்கம் பக்கத்தினர் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று நாகிசெட்டி பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் உடலை பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இது குறித்து மத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனிசாமி வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.