செய்திகள்
கோவில்பட்டியில் இளைஞர் காங்கிரசார் சாலை மறியல்
உ.பி. மாநிலத்தில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான வழக்கில் தொடர்புடைய பா.ஜ.க. எம்.எல்.ஏ. மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காங்கிரஸ் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
கோவில்பட்டி:
உத்தரபிரதேச மாநிலத்தில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான வழக்கில் தொடர்புடைய பா.ஜ.க. எம்.எல்.ஏ. மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோவில்பட்டியில் இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் ஆபிரகாம் ராய் மணி தலைமையில், தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஹஸன் மவுலானா, தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் சீனிவாசன், வழக்கறிஞர் பிரிவுத் தலைவர் அய்யலுசாமி, முன்னாள் வடக்கு மாவட்ட தலைவர் காமராஜ், மக்களவைத் தொகுதி இளைஞர் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சகாயராஜ், வட்டார தலைவர்கள் செல்லத்துரை, ரமேஷ் மூர்த்தி, கோவில்பட்டி பேரவைத் தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் கருப்பசாமி உள்ளிட்ட பலர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து வந்த கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் போராட்டக் குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.