செய்திகள்
விஷம்

மனைவி பிரிந்து சென்றதால் கூலிதொழிலாளி வி‌ஷம் குடித்து தற்கொலை

Published On 2019-08-01 10:22 GMT   |   Update On 2019-08-01 10:22 GMT
கோவையில் குடும்ப தகராறில் மனைவி பிரிந்து சென்றதால் மனமுடைந்த கூலி தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
கோவை:

கோவை குறிச்சி காந்திஜி ரோட்டை சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மகன் சிவா. (வயது41). கூலி தொழிலாளி. இவருக்கு கடந்த 20 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. கடந்த 10 வருடத்திற்கு முன்பு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரது மனைவி பிரிந்து சென்றுவிட்டார். இதையடுத்து சிவா தனியாக வசித்து வந்தார்.

இந்த நிலையில் வாழ்க்கையில் மனமுடைந்து காணப்பட்ட அவர் நேற்று குறிச்சி குளம் அருகே சாணி பவுடரை கரைத்து குடித்து இறந்து கிடந்தார். இதேபோல் கோவை குளத்துப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சந்திரன்(70). டீ மாஸ்டர். இவரது மனைவி கமலா(55). சந்திரனுக்கும் அவரது மனைவிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் சம்பவத்தன்றும் கணவன்- மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதில் மனமுடைந்த சந்திரன் வீட்டில் வி‌ஷம் குடித்து மயங்கி கிடந்தார். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

கோவை பன்னிமடை சாமுண்டீஸ்வரி வீதியை சேர்ந்தவர் திருமூர்த்தி. இவரது மகள் தீபா (வயது 18) இவர் 9ம் வகுப்பில் தேர்ச்சி பெறவில்லை. இதனால் பள்ளிக்கு செல்வதை நிறுத்தினார். பின்னர் அவரது வீட்டிலேயே தையல் பயிற்சி எடுத்து வந்தார். ஆனால் கடந்த சில நாட்களாக நம்மால் படிக்க முடியவில்லையே என்று மனவருத்தத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இதுகுறித்து தகவல் அறிந்த தடாகம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தடாகம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News