செய்திகள்
முத்தலாக் சட்டத்துக்கு பா.ஜனதா வரவேற்பு
முத்தலாக் சட்டத்துக்கு பாரதீய ஜனதா மாநிலத் தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ. வரவேற்பு தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி:
பாரதீய ஜனதா மாநிலத் தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
நம்நாட்டில் இது நாள்வரை முஸ்லிம் பெண்களுக்கு இழைக்கப்பட்டு வந்த அநீதியான `முத்தலாக்' விவாகரத்து முறையை தடை செய்யும் சட்டத்தை உருவாக்கும், மசோதாவை பிரதமர் மோடி பாராளுமன்றத்தில் இரு அவைகளிலும் நிறைவேற்றி இருப்பதை புதுவை பா.ஜ.க. பெருமகிழ்ச்சியோடு வரவேற்கிறது.
நம் பாரதம் வெவ்வேறு மதம், ஜாதி மற்றும் வெவ்வேறு மொழிகள் கொண்டதாகவே இருந்தும் அனைத்து பிரிவினரின் வாழ்க்கையை வளமாக்க வேண்டும் என்ற பிரதமர் மோடியின் குறிக்கோளே இந்த மசோதா வரக்காரணம். நம் நாட்டு பெண்கள் பொருளாதார ரீதியாக முன்னேற்றம் அடைய வேண்டும் என்பதற்காக, பிரதமர் மோடி அவர்கள் 2-வது முறையாக பதவி ஏற்ற ஒரு சில நாட்களிலேயே 50 ஆயிரமாக இருந்த வங்கி கடனை ரூ.1 லட்சம் வரை உயர்த்தினார். முஸ்லிம் பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதியை தடுக்கவும், உடனடியாக இந்த மசோதாவை பிரதமர் மோடி பதவி ஏற்ற சில நாட்களிலேயே கொண்டு வந்துள்ளார்.
பெண்ணுரிமை பற்றியும், பெண்ணுக்கு சம உரிமை பற்றியும், எதிர்க்கட்சிகள் அனைத்தும் வாக்கு வங்கியை மனதில் கொண்டு இந்த மசோதாவை எதிர்க்காமல், பெண்ணுரிமை நிலை நாட்டப்பட்டதற்காக தங்களது மகிழ்ச்சியை பொதுமக்களோடு கொண்டாட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.