செய்திகள்
கொலை

உசிலம்பட்டியில் ஆடு வியாபாரி கொலை- அண்ணன் மகன் போலீசில் சரண்

Published On 2019-07-31 10:26 GMT   |   Update On 2019-07-31 10:26 GMT
மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் இன்று காலை ஆடு வியாபாரி கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அவரது அண்ணன் மகன் போலீசில் சரண் அடைந்தார்.
உசிலம்பட்டி:

மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் உள்ள இடையப்பட்டி பெருமாள் கோவில்பட்டியைச் சேர்ந்தவர் முனியாண்டி (வயது 50), ஆடு வியாபாரி.

இன்று காலை உசிலம்பட்டி நகராட்சி அலுவலகம் அருகே உள்ள கறிக்கடை முன்பு முனியாண்டி நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த அவரது அண்ணன் மகன் ஆசை, அவருடன் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. சிறிது நேரத்தில் தகராறு முற்றி கைகலப்பானது.

இந்த நேரத்தில் ஆசை தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து முனியாண்டியை சரமாரியாக வெட்டினார். கை, கழுத்து, தலை உள்ளிட்ட பல இடங்களில் வெட்டு விழுந்ததால் ரத்த வெள்ளத்தில் முனியாண்டி அதே இடத்தில் துடிதுடித்து பலியானார்.

இன்று ஆடி அமாவாசை என்பதால் கறிக்கடை முன்பு கூட்டம் இருந்தது. கொலை நடந்தபோது பொதுமக்கள் ஓட்டம் பிடித்தனர். இதனால் தனது சித்தப்பாவை கொலை செய்த ஆசை சிறிது நேரம் அங்கேயே அரிவாளுடன் நின்றார்.

பின்னர் உசிலம்பட்டி நகர் போலீஸ் நிலையத்திற்கு சென்று சரண் அடைந்தார். அவரை கைது செய்த போலீசார், முனியாண்டி கொலைக்கான காரணம் குறித்து ஆசையிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சொத்து தகராறு காரணமாக முனியாண்டி கொல்லப்பட்டு இருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. நகரின் முக்கிய பகுதியில் நடந்த இந்த சம்பவம் உசிலம்பட்டியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News