search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "merchant murder"

    • கடந்த 24-ந்தேதி நள்ளிரவு அழகர், தனது நண்பர்களுடன் புதியம்புத்தூர் மெயின் ரோட்டில் நின்று கொண்டு இருந்தார்.
    • ஆத்திரமடைந்த முருகேசன், விறகு கட்டையால் அழகரை சரமாரி தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார்.

    புதியம்புத்தூர்:

    தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூர் காமராஜ் நகரை சேர்ந்தவர் லட்சுமனன் மகன் அழகர் (வயது 38). இவர் ரெடிமேட் ஆடைகள் விற்பனை தொழில் செய்து வந்தார். இவருக்கு மனைவி மற்றும் ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர்.

    அதே பகுதியை சேர்ந்தவர் முருகேசன் (43). இவர் புதியம்புத்தூரில் உள்ள ஓட்டலில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். நண்பர்களான இவர்கள் இருவரும் சமீபத்தில் காமராஜ் நகரில் நடந்த ஒரு திருமணத்திற்கு சென்றனர். அப்போது அவர்களுக்கு இடையே திடீரென தகராறு ஏற்பட்டது.

    பின்னர் அவர்கள் அங்கிருந்து வீட்டிற்கு புறப்பட்டு சென்றனர். இந்த சம்பவத்தால் அவர்களுக்கிடையே முன் விரோதம் இருந்து வந்துள்ளது.

    இந்நிலையில் கடந்த 24-ந்தேதி நள்ளிரவு அழகர், தனது நண்பர்களுடன் புதியம்புத்தூர் மெயின் ரோட்டில் நின்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு முருகேசன் வந்துள்ளார். அங்கு இருவருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த முருகேசன், விறகு கட்டையால் அழகரை சரமாரி தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார்.

    இதில் பலத்த காயமடைந்த அவரை அப்பகுதியை சேர்ந்தவர்கள் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதற்கிடையே முருகேசன் புதியம்புத்தூர் போலீஸ் நிலையத்தில் சரணடைந்தார். அவரை போலீசார் கைது செய்தனர்.

    இந்நிலையில் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி அழகர் பரிதாபமாக உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கண்ணாடிபுத்தூர் அமராவதி வாய்க்கால் பாலத்துக்கு அடியில் அமர்ந்து மது அருந்தியுள்ளனர்.
    • குடிபோதையில் பாண்டியின் தாயை பற்றி மதியழகன் அவதூறாக பேசியுள்ளார்.

    மடத்துக்குளம்:

    திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளத்தையடுத்த கருப்புசாமிபுதூர் பகுதியில் அமராவதி பிரதான கால்வாய் உள்ளது. தற்போது இந்த கால்வாயில் தண்ணீர் வரத்து இல்லாமல் வறண்டு கிடக்கிறது.

    இந்த நிலையில் நேற்று மாலை அந்த பகுதிக்கு வந்த பொதுமக்கள் அமராவதி வாய்க்காலில் பாலத்துக்கு அடியில் தலையில் காயத்துடன் சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் ஒன்று கிடப்பதை கண்டனர். அந்த உடலின் மேல் இலை தழைகள் உள்ளிட்ட குப்பைகள் மூடியிருந்தது. மேலும் கழுத்து மற்றும் கைகளில் ருத்ராட்ச மாலை அணிந்த நிலையில் அரை நிர்வாண கோலத்தில் அந்த உடல் காணப்பட்டது.

    உடனடியாக இது குறித்து மடத்துக்குளம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் கொலை செய்யப்பட்ட நபர் யார்? கொலையாளிகள் யார்? கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

    இந்தநிலையில் கொலை செய்யப்பட்டவர் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த மதியழகன்(வயது 45) என்பது தெரியவந்தது. இரும்பு வியாபாரியான அவர் தனது நண்பர்களும் இரும்பு வியாபாரிகளுமான தூத்துக்குடியை சேர்ந்த பாண்டி (45), முருகன் (40)ஆகியோருடன் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளத்திற்கு இரும்புகள் வாங்க சென்றனர்.

    அப்போது கண்ணாடிபுத்தூர் அமராவதி வாய்க்கால் பாலத்துக்கு அடியில் அமர்ந்து மது அருந்தியுள்ளனர். குடிபோதையில் பாண்டியின் தாயை பற்றி மதியழகன் அவதூறாக பேசியுள்ளார். இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த நண்பர்கள் 2பேரும் சேர்ந்து மதியழகன் தலையில் கல்லைப்போட்டு கொன்றனர். பின்னர் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இதையடுத்து தலைமறைவான பாண்டி, முருகன் ஆகிய 2பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் மடத்துக்குளம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • அய்யம்பெருமாள் இறந்து கிடந்த குடோன் பகுதியில் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
    • கைதான அனில்ஜாவிடம் கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருவொற்றியூர்:

    திருவொற்றியூர், கிராமம் தெருவை சேர்ந்தவர் அய்யம்பெருமாள்(வயது53). பழ வியாபாரி. இவர் கடந்த 7-ந்தேதி அதிகாலை பழம் வாங்க கோயம்பேடு செல்வதாக மனைவியிடம் கூறி விட்டு சென்றார். இந்த நிலையில் அய்யம்பெருமாள் வீட்டின் அருகே உள்ள ஒரு குடோன் வாசலில் இறந்து கிடந்தார். திருவொற்றியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் காதர்மீரான் மற்றும் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் அவர் அடித்து கொலை செய்யப்பட்டு இருப்பதும், அவரது விலா எலும்பு முறிந்திருப்பதும் தெரிந்தது.

    இதைத்தொடர்ந்து அய்யம்பெருமாள் இறந்து கிடந்த குடோன் பகுதியில் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதில் அங்கு தங்கி தொழிலாளியாக வேலைபார்த்து வரும் பீகார் மாநிலத்தை சேர்ந்த அனில் ஜா(45) என்பவர் அய்யம்பெருமாளை கொசுவலை தகராறில் அடித்து கொலை செய்து இருப்பது தெரிந்தது.

    இதைத்தொடர்ந்து அனில்ஜாவை போலீசார் கைது செய்தனர். சம்பவத்தன்று அதிகாலை அய்யம் பெருமாள் பழம் வாங்க கோயம்பேடு செல்லாமல் அனில்ஜா பயன்படுத்தும் கொசுவலையை எடுத்து போர்த்திக்கொண்டு அங்கு நிறுத்தப்பட்டு இருந்த மினி லாரியில் தூங்கி உள்ளார். இதனை கவனித்த அனில்ஜா கொசுவலையை எடுத்தது தொடர்பாக அய்யம் பெருமாளிடம் மோதலில் ஈடுபட்டு தாக்கினார். மேலும் அவரை லாரியில் இருந்து கீழே தள்ளி விட்டதாகவும் தெரிகிறது. இதில் அய்யம்பெருமாள் இறந்து போனதால் பயந்து போன அனில்ஜா எதுவும் தெரியாதது போல் அங்கிருந்து தப்பி சென்று விட்டார். அய்யம்பெருமாள் அடிக்கடி மதுபோதையில் இருப்பதால் முதலில் அவர் தவறி விழுந்து இறந்து இருக்கலாம் என்று கூறப்பட்டது. போலீசாரின் விசாரணையில் அவர் அடித்து கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது.

    கைதான அனில்ஜாவிடம் கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பது குறித்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • ராசிபுரம் டி.எஸ்.பி. செந்தில்குமார், பேளுக்குறிச்சி இன்ஸ்பெக்டர் சிவசங்கரன், ஆயில்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி, தினேஷ் குமாரை கைது செய்தனர்.
    • நிலத்தகராறில் வியாபாரி அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தாலுகா நாமகிரிப்பேட்டை அருகே உள்ள நாரைக்கிணறு மேற்கு தெருவை சேர்ந்தவர் பிச்சமுத்து. இவரது மகன் முருகேசன் (வயது 60). அதே பகுதியைச் சேர்ந்த இவரது தம்பி பாதர்.

    முருகேசன் எண்ணெய் வியாபாரம் செய்து வந்தார். முருகேசனுக்கும் அவரது தம்பி பாதருக்கும் இடையே கடந்த 5 ஆண்டாக நிலம் பிரிப்பது சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்தது. இதுதொடர்பாக இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறும் ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில், நேற்று மாலை விவசாயி பாதரின் வீட்டின் அருகே முருகேசன் நின்று கொண்டிருந்தார். அப்போது பாதரின் மகன் தினேஷ் குமார் (31), பெரியப்பா முருகேசனிடம், நிலத்தை எப்போது பிரித்துக் கொடுப்பீர்கள் என்று கேட்டுள்ளார். அப்போது அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    இதில் ஆத்திரம் அடைந்த தினேஷ்குமார், அங்கிருந்த கட்டையால் முருகேசனை பயங்கரமாக தாக்கி உள்ளார். இதில் படுகாயம் அடைந்த முருகேசன் சரிந்து விழுந்தார். அவரை அருகிலிருந்தவர்கள் மீட்டு, ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சேலம் சீலநாயக்கன்பட்டியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் இன்று அதிகாலை 1 மணி அளவில் முருகேசன் இறந்தார்.

    இதுபற்றி ராசிபுரம் டி.எஸ்.பி. செந்தில்குமார், பேளுக்குறிச்சி இன்ஸ்பெக்டர் சிவசங்கரன், ஆயில்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி, தினேஷ் குமாரை கைது செய்தனர்.

    நிலத்தகராறில் வியாபாரி அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கடந்த 3 மாதத்தில் மட்டும் 18 கொலைகள் திண்டுக்கல் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் அரங்கேறியுள்ளது.
    • நகைக்காக, முன் விரோதம், குடும்ப பிரச்சினை, கள்ளக்காதல், சொத்து பிரச்சினை ஆகியவற்றால் தொடர் கொலைகள் நடந்து வருகிறது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் செல்லாண்டியம்மன் கோவில் நாராயண பிள்ளை தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் அப்துல் லத்தீப் (வயது 46). முறுக்கு வியாபாரி. இவரது மனைவி நிஷா. இவர்களுக்கு சாகுல் (வயது 22), தவ்பீக் (15) என 2 மகன்கள் உள்ளனர். சாகுல் பழனி சாலையில் செல்போன் கடை வைத்துள்ளார். தவ்பீக் 9ம் வகுப்பு படித்து வருகிறார்.

    இன்று அதிகாலை சாகுல் வெளியே சென்று விட்ட நிலையில் அப்துல் லத்தீப் மற்றும் அவரது இளைய மகன் வீட்டில் இருந்தனர். அந்த நேரத்தில் மர்ம கும்பல் வீட்டில் புகுந்தனர். அங்கு தூங்கிக் கொண்டு இருந்த அப்துல் லத்தீப்பை அரிவாளால் சரமாரியாக வெட்டினர்.

    மேலும் இதை தடுக்க வந்த தவ்பீக்கிற்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. அவர்கள் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஒன்று கூடினர். இதை பார்த்ததும் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

    அப்துல் லத்தீப்பையும், தவ்பீக்கையும் ஆம்புலன்ஸ் மூலம் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் வழியிலேயே அப்துல் லத்தீப் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மகனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் திண்டுக்கல் நகர் மேற்கு போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்துல் லத்தீப் முறுக்கு வியாபாரம் செய்து வந்துள்ளார். கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதிகாலை நேரத்தில் வீடு புகுந்து வியாபாரியை வெட்டி கொலை செய்த சம்பவம் திண்டுக்கல்லில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கடந்த 3 மாதத்தில் மட்டும் 18 கொலைகள் திண்டுக்கல் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் அரங்கேறியுள்ளது. நகைக்காக, முன் விரோதம், குடும்ப பிரச்சினை, கள்ளக்காதல், சொத்து பிரச்சினை ஆகியவற்றால் தொடர் கொலைகள் நடந்து வருகிறது. மேலும் சிறுமலையில் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த சம்பவமும் அரங்கேறியுள்ளது.

    பெரும்பாலான கொலைகள் சொந்த பிரச்சினையில் நடந்திருந்தாலும் தொடர் சம்பவங்கள் பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.

    2023ம் ஆண்டு தொடங்கிய 2-வது நாளில் திண்டுக்கல் பஸ் நிலையத்தில் நிலக்கோட்டை வாலிபர் குத்திக் கொலை செய்யப்பட்டார். 13-ந் தேதி வடமதுரையில் வாலிபர் கேரம் விளையாட்டு தகராறில் அடித்து கொலை செய்யப்பட்டார். 20-ந் தேதி தாடிக்கொம்பு உலகம்பட்டியில் முதியவரும், அதே நாளில் மறவபட்டியில் ஐ.டி.ஊழியரும் கொல்லப்பட்டனர்.

    பிப்ரவரி மாதம் 10-ந்தேதி குஜிலியம்பாறையில் வாலிபரை கொன்று கிணற்றில் வீசினர். 13-ந் தேதி எரமநாயக்கன் பட்டியிலும், 17-ந் தேதி ரெட்டியபட்டியிலும் கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள் நடைபெற்றன. 24-ந் தேதி பட்டிவீரன்பட்டியில் மகனை தந்தை தலையில் கல்லைப்போட்டு கொன்றார்.

    மார்ச் மாதம் 2-ந் தேதி சொத்து தகராறில் விவசாயிகள் மீது முன்னாள் ராணுவ வீரர் துப்பாக்கி சூடு நடத்தினார். அதே நாளில் வேடப்பட்டியில் ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்டார். 3-ந் தேதி கள்ளக்காதல் பிரச்சினையில் பெண் கொலை செய்யப்பட்டார். அதே நாளில் தொழிலாளியும் கொல்லப்பட்டார். 4-ந் தேதி கூலித் தொழிலாளி முன் விரோதம் காரணமாக கொல்லப்பட்டார். 7-ந் தேதி குஜிலியம்பாறையில் கள்ளக்காதல் பிரச்சினையில் வாலிபரை பெட்ரோல் ஊற்றி கொன்றனர். 14-ந் தேதி சின்னாளப்பட்டியில் தந்தையை மகன்களே வெட்டி கொன்றனர். கடந்த 11-ந் தேதி மூதாட்டியை குடிபோதையில் வாலிபர் கற்பழித்து கொன்றார். இந்த நிலையில் 18-வது சம்பவமாக இன்று வீடு புகுந்து வியாபாரி கொல்லப்பட்டுள்ளார்.

    • அற்புதராஜூடன் 2 பேர் பொன்ராஜின் வீட்டுக்குள் சென்று விட்டு முகத்தை மறைத்துக் கொண்டு வெளியில் வரும் காட்சி அப்பகுதியில் உள்ள கேமராவில் பதிவாகி இருந்தது.
    • கேமரா காட்சிகளை வைத்து அற்புதராஜை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    சென்னை:

    சென்னை அபிராமபுரத்தில் வசித்து வந்த காய்கறி வியாபாரி பொன்ராஜ். கடந்த 13-ந்தேதி வீடு புகுந்து வெட்டி கொலை செய்யப்பட்டார்.

    தூத்துக்குடியை சேர்ந்த இவருக்கும், இவரது தம்பி குடும்பத்தினருக்கும் இடையே சொத்து தகராறு இருந்து வந்துள்ளது. இது தொடர்பாக இருந்து வந்த முன் பகையால் சென்னையில் வசித்து வந்த தம்பி மகனான அற்புதராஜ் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து பொன்ராஜை வீடு புகுந்து கொலை செய்தது தெரியவந்தது.

    இதுதொடர்பாக அபிராமபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரதீப் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். அப்போது அற்புதராஜூடன் 2 பேர் பொன்ராஜின் வீட்டுக்குள் சென்று விட்டு முகத்தை மறைத்துக் கொண்டு வெளியில் வரும் காட்சி அப்பகுதியில் உள்ள கேமராவில் பதிவாகி இருந்தது.

    இதை வைத்து அற்புதராஜை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    அற்புதராஜூடன் சென்று பொன்ராஜை கொலை செய்தவர்கள் யார்? என்பது பற்றி நடத்தப்பட்ட விசாரணையில் தேனாம்பேட்டை பகுதியை சேர்ந்த ரவுடி வாண்டுமணி மற்றும் கூட்டாளியான சுப்ரமணி என்பது தெரியவந்தது.

    இருவரையும் போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் தலைமறைவாக இருந்த வாண்டு மணி, சுப்ரமணி ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    அற்புதராஜின் மைத்துனர் நடத்தி வரும் 'பாஸ்ட் புட்' உணவகத்துக்கு ரவுடி வாண்டு மணி சாப்பிட செல்வது வழக்கம். அப்போது ஏற்பட்ட பழக்கத்தில்தான் அற்புதராஜ், வாண்டு மணியையும் அவரது கூட்டாளி சுப்ரமணியையும் துணைக்கு அழைத்து சென்று பொன்ராஜை கொலை செய்திருப்பது தெரிய வந்துள்ளது.

    • அபிராமபுரத்தில் உள்ள பெரியப்பா பொன்ராஜின் வீட்டுக்கு அற்புதராஜ் சென்று தகராறில் ஈடுபட்டார். அப்போது இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
    • பொன்ராஜை, அற்புதராஜ் சரமாரியாக தாக்கியுள்ளார். தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து அற்புத ராஜ், பொன்ராஜை சரமாரியாக வெட்டினார்.

    சென்னை:

    சென்னை அபிராமபுரம் படவட்டன் தெரு பகுதியை சேர்ந்தவர் பொன்ராஜ். தூத்துக்குடியை சேர்ந்த இவர் சென்னையில் தங்கி இருந்து காய்கறி வியாபாரம் செய்து வந்தார்.

    இவருக்கும் இவரது தம்பி குடும்பத்துக்கும் இடையே தூத்துக்குடியில் உள்ள சொத்து தொடர்பாக பிரச்சினை இருந்து வந்துள்ளது. தம்பி மகனான அற்புதராஜ் சென்னை ஆழ்வார்பேட்டையில் வசித்து வருகிறார்.

    இந்தநிலையில் நேற்று அபிராமபுரத்தில் உள்ள பெரியப்பா பொன்ராஜின் வீட்டுக்கு அற்புதராஜ் சென்று தகராறில் ஈடுபட்டார். அப்போது இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

    இதில் பொன்ராஜை, அற்புதராஜ் சரமாரியாக தாக்கியுள்ளார். தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து அற்புத ராஜ், பொன்ராஜை சரமாரியாக வெட்டினார். இதில் பலத்த காயம் அடைந்த பொன்ராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    இதையடுத்து தூத்துக்குடியில் உள்ள உறவினர்களுக்கு போன் செய்து பொன்ராஜை கொலை செய்து விட்டேன் என்று அற்புத ராஜ் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் அருகில் இருப்பவர்களிடம் தகவல் தெரிவித்தனர். இதன் பின்னர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    அபிராமபுரம் போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தப்பி ஓடிய அற்புதராஜை போலீசார் தேடி வருகிறார்கள்.

    • கடல்மணி என்பவருக்கும், முத்துராமலிங்கராஜனின் மனைவி உஷாவுக்கும் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது.
    • கள்ளக்காதலை முத்துராமலிங்கராஜன் கண்டித்து வந்துள்ளார் என்பது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

    ஆலங்குளம்:

    தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள வட்டாலூரை சேர்ந்தவர் முத்துராமலிங்க ராஜன்(வயது 45). பழைய இரும்பு வியாபாரி.

    கடந்த 9-ந்தேதி காலை பூலாங்குளம் காட்டுப்பகுதியில் முத்துராமலிங்கராஜன் கை, கால்கள் முறிக்கப்பட்டு அடித்துக்கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுதொடர்பாக ஆலங்குளம் போலீசார் விசாரணை நடத்தியதில் கள்ளக்காதல் விவகாரத்தில் அவர் கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது.

    அதே பகுதியை சேர்ந்த கடல்மணி என்பவருக்கும், முத்துராமலிங்கராஜனின் மனைவி உஷாவுக்கும் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. அதனை முத்துராமலிங்கராஜன் கண்டித்து வந்துள்ளார் என்பதும் தெரியவந்தது.

    இதையடுத்து உஷாவை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில் உஷாவின் கள்ளக்காதலன் கடல்மணி தனது நண்பர் ஒருவருடன் சேர்ந்து முத்துராமலிங்கராஜனை கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து உஷாவை போலீசார் கைது செய்தனர்.

    தலைமறைவான கடல்மணியை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். அவரது செல்போன் சிக்னலை கொண்டு ஆய்வு செய்தபோது அவர் தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார் திருநகரி பகுதியில் பதுங்கியிருப்பதாக காட்டியது.

    உடனே தனிப்படையினர் அங்கு விரைந்து சென்றனர். அப்போது தூத்துக்குடியை நோக்கி அவர் சென்று கொண்டிருப்பதாக செல்போன் சிக்னல் காட்டியது. அதனை வைத்து தனிப்படையினர் பின்தொடர்ந்து சென்று தூத்துக்குடியில் பதுங்கியிருந்த கடல்மணியை கைது செய்தனர்.

    அவரது நண்பரான குமரி மாவட்டம் மார்த்தாண்டத்தை சேர்ந்த ஒருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களை ஆலங்குளம் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • பலசரக்கு வியாபாரி அடித்துக்கொலை செய்யப்பட்டார்.
    • கொலை தொடர்பாக திருப்புல்லாணி போலீசார் வழக்குப்பதிவு செய்து செய்யது இபுராகிமை ேதடி வருகின்றனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் அருகே உள்ள வண்ணாங்குண்டு முஸ்லிம் தெருவை சேர்ந்த வர் நசீர் அலி (வயது 55). இவர் அதே பகுதி யில் பலசரக்கு கடை நடத்தி வந்தார். இவருக்கு ஜாரியா பேகம் என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.

    கடந்த 4 வருடங்களுக்கு முன்பு பெரியபட்டினத்தில் தனக்கு சொந்தமான 12 சென்ட் நிலத்தை நசீர்அலி ரூ.27 லட்சத்துக்கு சஹாரூல் ஜமால் என்பவருக்கு விற்றார். இதில் பெரியபட்டினம் பண்ணக்கரையை சேர்ந்த செய்யதுஇபுராகிம் என்ப வர் தரகராக செயல்பட்டு நிலத்தை விற்று கொடுத்த தாக தெரிகிறது.

    ஆனால் நிலம் விற்ற பணத்தில் ரூ.14 லட்சத்து 80 ஆயிரம்மட்டுமே நசீர் அலியிடம் கொடுக்கப்ப ட்டது. மீதமுள்ள ரூ.12 லட்சத்து 20 ஆயிரம் கொடுக்கப்படவில்லை.

    நசீர்அலி நிலம் விற்ற மீதி பணத்தை தருமாறு செய்யது இபுராகிமிடம் அடிக்கடி கேட்டுள்ளார். ஆனால் அவர் உரிய பதில் அளிக்கவில்லை. இதனால் 2 பேருக்கும் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டது.

    இந்த நிலையில் நேற்று மாலை நசீர்அலி தொழு கையை முடித்து விட்டு நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த செய்யது இபுராகிம் அவரி டம் வாக்குவாதம் செய்து தகராறில் ஈடுபட்டார்.

    ஆத்திரம் அடைந்த அவர், நசீர் அலியை சரமாரி யாக தாக்கி தள்ளி விட்ட தாக தெரிகிறது. இதில் அவர் அருகில் குவித்து வைக்கப்பட்டிருந்த செங்கல் குவியலில் விழுந்து படுகாயம் அடைந்தார்.

    உயிருக்கு போராடிய அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு பெரியபட்டினம் தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் நசீர்அலி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதையடுத்து பிரேத பரிசோதனைக்காக அவரது உடல் ராமநாதபுரம்அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த கொலை தொடர்பாக திருப்புல்லாணி போலீசார் வழக்குப்பதிவு செய்து செய்யது இபுராகிமை ேதடி வருகின்றனர்.

    • வெட்டு காயம் அடைந்த காந்தி அவரது மனைவி லதா, செல்வம் சங்கீதா, ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பாலேந்திரன், வெங்கடேசன் ஆகிய 6 பேர் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    • பெண்ணை வெட்டிக்கொன்று மேலும் 6 பேரை வெட்டிய வியாபாரி சிறிது நேரத்தில் இரும்பு கம்பியால் அடித்துக் கொல்லப்பட்டது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    செய்யாறு:

    திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த வெம்பாக்கம் அருகே உள்ள அலிவிடை தாங்கி பைரவபுரம் பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன் (வயது70).

    இவர்களுக்கு பூர்வீக சொத்து அந்த பகுதியில் உள்ளது. இவருக்கு 2 மனைவிகள் உள்ளனர். முதல் மனைவி சரோஜாவின் மகன் செல்வம் (50). 2-வது மனைவி பார்வதியின் மகன் சுப்பிரமணி (45) இவர்களுக்கு இடையே நிலத்தகராறு இருந்து வந்தது.

    இளநீர் வியாபாரியான சுப்பிரமணி வழக்கம்போல் வியாபாரத்தை முடித்துவிட்டு விவசாய நிலத்துக்கு வந்தார். அப்போது அங்கு செல்வம் மனைவி சங்கீதா (45) துணி துவைத்து விவசாய நிலத்தில் காய வைத்திருந்தார்.

    இதை பார்த்த சுப்பிரமணி திடீரென இளநீர் வெட்டும் கத்தியால் துணி காயகட்டியிருந்த கயிற்றை அறுத்துள்ளார்.

    இதை தட்டிக்கேட்ட சங்கீதாவையும் கத்தியால் சுப்பிரமணி வெட்டினார். இதை பார்த்த பக்கத்து நிலத்திலிருந்த வெங்கடேசன் மனைவி வேண்டா அமிர்தம் (55) எதற்காக தனியாக இருக்கும் பெண்ணிடம் தகராறில் ஈடுபடுகிறீர்கள் என கேட்டார்.

    அப்போது வேண்டா அமிர்தத்தின் கழுத்தில் சுப்பிரமணி வெட்டினார். இதில் வேண்டா அமிர்தம் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.

    இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சங்கீதா வெட்டு காயத்துடன் ரத்தம் வழிந்தபடி விவசாய நிலத்தில் இருந்து தப்பி ஓடினார். அப்போது வெறி பிடித்தபடி கத்தியுடன் சுப்பிரமணி சங்கீதாவை விரட்டி சென்றார். எதிரே சங்கீதாவின் கணவர் செல்வம் வேண்டா அமிர்தத்தின் கணவர் வெங்கடேசன் ஆகியோர் வந்து கொண்டிருந்தனர். அவர்களிடம் நடந்த சம்பவத்தை சங்கீதா கூறிக் கொண்டிருந்தார்.

    இதற்கிடையில் சுப்பிரமணி கத்தியுடன் பின் தொடர்ந்து வந்தார். அவரை மடக்கி எதற்காக என் மனைவியை வெட்டினாய் என வெங்கடேசன் கேட்டார். அப்போது அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பேசிக்கொண்டிருக்கும் போதே செல்வம் அவரது மனைவி சங்கீதா வெங்கடேசன் ஆகிய 3 பேரையும் நடுரோட்டிலேயே சுப்பிரமணி வெட்டி விட்டு தப்பி சென்றார்.

    அவரை பிடிக்க முயன்ற அழிவிடை தாங்கி ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பாலேந்திரன் என்பவரையும் வெட்டிவிட்டு ஓடினார்.

    தொடர்ந்து வெம்பாக்கம் டவுனில் பஞ்சர் கடை நடத்தி வரும் காந்தி( 55) அவரது மனைவி லதா என்பவரையும் சுப்பிரமணி கத்தியால் வெட்டினார்.

    இதில் அவர்களும் படுகாயம் அடைந்தனர். இதற்கிடையில் காந்தி தனது கடையில் இருந்த இரும்பு ராடை எடுத்து சுப்பிரமணியின் பின்பக்க தலையில் தாக்கினார். இதில் சுப்பிரமணி சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த செய்யாறு டி.எஸ்.பி. செந்தில் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

    பிரம்மதேசம் போலீசார் வழக்கு பதிவு செய்து வேண்டா அமிர்தம், சுப்பிரமணி ஆகியோர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செய்யாறு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    வெட்டு காயம் அடைந்த காந்தி அவரது மனைவி லதா, செல்வம் சங்கீதா, ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பாலேந்திரன், வெங்கடேசன் ஆகிய 6 பேர் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    பெண்ணை வெட்டிக்கொன்று மேலும் 6 பேரை வெட்டிய வியாபாரி சிறிது நேரத்தில் இரும்பு கம்பியால் அடித்துக் கொல்லப்பட்டது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    பல்லாவரத்தில் குடிபோதையில் தகராறில் வியாபாரி அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    தாம்பரம்:

    பல்லாவரத்தை அடுத்த நாகல்கேணி ஆதாம் நகரைச்சேர்ந்தவர் சீனிவாசன். இவர் நாகல்கேனி- திருநீர்மலை சாலையில் பன்றி இறைச்சி விற்பனை கடை நடத்தி வருகிறார்.

    நேற்றிரவு சீனிவாசன் மது போதையில் இரும்பு கம்பியால் சாலையில் சென்றவர்களை விரட்டியடித்தபடி தகராறில் ஈடுபட்டார்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த விஜய், அவரது நண்பர் பார்த்திபன் ஆகியோரை சீனிவாசன் கம்பியால் தாக்கினார்.

    இதனால் அவரிடம் இருவரும் தகராறில் ஈடுபட்டனர். அப்போது விஜய், பார்த்திபன் தங்களது நண்பர்களுக்கு போன் மூலம் தகவல் தெரிவித்தனர்.

    அங்கு 6 பேர் கொண்ட கும்பல் வந்தது. அவர்கள் சீனிவாசனை கையில் வைத்து இருந்த இரும்பு கம்பியை பிடுங்கி சரமாரியாக தாக்கினர். இதில் ரத்த வெள்ளத்தில் சீனிவாசன் சம்பவ இடத் திலேயே இறந்தார். இதை கண்ட அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடி விட்டது.

    இதுகுறித்து சங்கர் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சீனிவாசன் உடலை கைப்பற்றி குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக விஜய் மற்றும் பார்த்திபன் உட்பட 7 பேரை கைது செய்தனர். மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்

    கோவை மாவட்டம் அன்னூர் அருகே இன்று மரக்கட்டையால் தாக்கி வியாபாரி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக ஒருவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அன்னூர்:

    கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள சாலையூரை சேர்ந்தவர் சிவசாமி (46). இவர் கடந்த 3 வருடமாக கணேசபுரத்தில் குடும்பத்துடன் தங்கி அங்குள்ள மெயின் ரோட்டில் கோழிக்கடை நடத்தி வந்தார்.

    இன்று காலை சிவசாமி வாக்கிங் செல்வதற்காக வீட்டை விட்டு வெளியே வந்தார். அப்போது அந்த வழியாக வந்த வட மாநில வாலிபர் திடீரென மரக்கட்டையால் சிவசாமி தலையில் ஓங்கி அடித்தார்.

    இதில் அவர் பலத்த காயம் அடைந்தார். அக்கம் பக்கத்தினர் சிவசாமியை மீட்டு கோவில் பாளையத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி சிவசாமி இறந்தார். சிவசாமியை கொலை செய்த வாலிபரை பொதுமக்கள் மடக்கி பிடித்தனர். பின்னர் அன்னூர் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினார்கள். அவர் எதுவும் பேச மறுக்கிறார். மனநிலை பாதிக்கப்பட்டவர் போல் காணப்படுகிறார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. கொலை செய்யப்பட்ட சிவசாமிக்கு லட்சுமி என்ற மனைவியும் 2 மகன்களும் உள்ளனர்.
    ×